செவ்வாய், 30 மார்ச், 2021

163. எல்லாம் ஆனந்தமயம் என்று என்னை உணரச் செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லாம் ஆனந்தமயம் என்று என்னை உணரச் செய்.

நான் ஆனந்த மஹாசமுத்திரத்தில் பொங்கி எழுந்த ஓர் இன்ப நுரைக்கடல். என் வாழ்க்கைச் சாகரம் ஆனந்தப் பேரலைகளால் நிறைந்துள்ளது. முடிவற்ற என் புன்னகையின் சிற்றலைகளும் வாழ்வின் எதிரலைகளும், எல்லா இதயங்களுக்கும் பரவிச்சென்று, இறுதியில் எல்லையற்ற ஆனந்தத்தின் நெஞ்சில் ஓய்வெடுத்துறங்க செல்கின்றன.

எல்லா ஆனந்தப் பேரலைகளின் மேலும் நடனமாட விரும்பும் நானொரு ஆனந்தத்தின் சிற்றலை. ஆனந்த சாகரமாகப் பரந்துவிரியப் போராடும் நானொரு ஆனந்தத்தின் சிற்றலை.

என்னை ஆனந்த ஒளிவிளக்காக ஆக்கு, அதன்துணையால் புயலால் அவதியுறும் வாழ்க்கைக் கலனங்களை வழிநடத்திப் பத்திரமாக ஆனந்தக் கரைக்குக் கொண்டுசேர்ப்பேன். 

ஒவ்வொரு செயல் கொடியும் ஆனந்தத் திராட்சைக் கொத்துக்களை  சுமக்கட்டும். நான் வாழ்வின் அனைத்துச் சிறு இன்பங்களும் நிறைந்த திராட்சைத்  தோட்டத்திலிருந்து சேகரித்த தேவ மதுரசத்தைப் பருகுவேனாக.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
163 Make me feel that everything is Joy.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 28 மார்ச், 2021

92. உடல் நோய்களிலிருந்து குணம்பெற உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உடல் நோய்களிலிருந்து குணம்பெற உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, நீ என் பாதிக்கப்பட்ட உடல்பாகத்தில் இருக்கின்றாய். நீ அதனுள்ளே இருப்பதனால், அது நலமாகவே உள்ளது. இறைத்தந்தையே, நீ பூர்ணஸ்வரூபன். நான் உன் பிரதிபிம்பம். நானும் பூரணமாக இருக்கின்றேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
92 Demand for healing of any bodily disease.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!       

93. பிறர் நலனுக்காக உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிறர் நலனுக்காக உரிமையுடன்-வேண்டுதல்.

பேருணர்வே, நீ என்னுள் இருக்கின்றாய் - நான் நலமாக உள்ளேன். நீ அவருள்ளே இருக்கின்றாய். அவர் நலமாக உள்ளார். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
93 Demand for healing others.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

94. மனதிலிருந்து மனக்கிருமிகளை ஒழிக்கக்கோரி உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

மனதிலிருந்து மனக்கிருமிகளை ஒழிக்கக்கோரி உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, நீ என் மனத்தினில் இருக்கின்றாய் - நானே நீ. இறைத்தந்தையே, நீ வலிமை: நீ என்னுள் இருக்கின்றாய் - நான் வலிமை. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
94 Demand for freeing the mind from mental bacteria.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 27 மார்ச், 2021

167. உன் செயலை விட வேறெந்த செயலும் பெரியதன்று என்று கருத எங்களுக்குக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் செயலை விட வேறெந்த செயலும் பெரியதன்று என்று கருத எங்களுக்குக் கற்பி.

பேருணர்வே, உன் ஆன்மீகச் செயலை விட வேறெந்த செயலும் பெரியதன்று என்று கருத எங்களுக்குக் கற்பி, ஏனெனில் உன்னிடம் இருந்து பெறும் சக்தியினால் அன்றி எந்த ஓர் செயலும் செய்ய சாத்தியமில்லை.

உனக்கு ஆட்செய்யும் கடமையை விட வேறெந்த கடமையும் முக்கியமானதன்று என்று உணர எங்களுக்குக் கற்பி, ஏனெனில் நீயில்லாமல் எந்த ஓர் கடமையும் சாத்தியமில்லை; உன்னை எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் நேசிக்க எங்களுக்குக் கற்பி, ஏனெனில் உன் பேரன்புப் பேருயிரினால் அன்றி நாங்கள் வாழவோ, எதையும் விரும்பவோ, யாரையும் நேசிக்கவோ முடியாது.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
167 Teach us to consider no work more important than Thy work.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 26 மார்ச், 2021

162. தறிகெட்டப் புலன்களினைக் கட்டுப்படுத்துவதற்காக உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தறிகெட்டப் புலன்களினைக் கட்டுப்படுத்துவதற்காக உரிமையுடன் வேண்டுதல்.

பேருணர்வே, என் தணியாத புலனாசைகள் தவறான செயல்களால் ஊட்டப்படாமல் இருக்கட்டும். அவைகள் என் நிஜமான இன்பத்தை மட்டுமே நாடுமாறு கட்டுப்படுத்த எனக்குக் கற்பி. என் புலன்கள் தறிகெட்டுப் போனால், அவைகளின் ஆசைகளை ஒத்துழையாமையெனும் தடி கொண்டு நிர்வகித்து, அவைகளை முழுமைபொருந்திய செயல்களில் வழிநடத்த எனக்குக் கற்பி. 

மின்சாரம் எப்படி ஒரு கட்டிடத்தை ஒளிபெறச் செய்யவும் அல்லது அதனை அழிக்கவும் உபயோகப்படுமோ, அதேபோல், மனிதசக்தி ஒருவரின்  வாழ்வைப் புகழ்பெறவும் அல்லது சீர்குலைக்கவும் வைக்க முடியும். அதனால், நீ ஒப்படைத்தளித்த என் கட்டுக்குளுள்ள ஆற்றல்களை நான் அறிவுடன் நிர்வகிக்கக் கற்றுக்கொண்டு, இருமுனை வீர்யமுடைய என் உடைமைகளை நல்லவற்றிற்கு மட்டுமே பயன்படுமாறு உபயோகிப்பேனாக.

பலநாக்குத் தணல்களாய் எரியும் என் பேராசைத் தீயை ஞான வெண்ணெருப்பினால், அவைகளுடன் அவைவிடும் சாம்பலையும் பொசுக்கி அழிக்கட்டும்.  

என் எல்லா தறிகெட்டப் புலன்களும் ஆனந்தமாய் உன் நெறிப் பிரகாரம்  இயைந்து ஒழுகும் வரை, பேருணர்வே, உன் இச்சையுடன் இயைந்து ஒழுகி, என் சிறு இசைப்பகுதியை வாசித்து, என் சிறு கடமையை ஆற்றி, என் சிறு கீதத்தைப் பாடி ஒத்துழைப்பேனாக.

என் புலன்விழைவுகள் ஆன்மவிழைவுகளாக உருமாறட்டும். பேருணர்வே, உன் விருப்பத்தின் பாதையிலிருந்து புலன்கள்பக்கம் நான் ஒருக்கால் தவறி நழுவ நேர்ந்தால், உன் ஒழுக்கமெனும் செங்கோலை நான் உணருமாறு செய்வாயாக.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
162 Demand for control of the unruly senses.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 23 மார்ச், 2021

116. பக்தியை உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பக்தியை உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, என் வணங்கும் கரங்களில் என் இதயத்தை இருத்திக் கொள்வேனாக. உன் அன்பினால் என் வேண்டுதல்களை பூரிதமாக்க எனக்குக் கற்பி. ஒரு குழந்தையின் எளிதான, நேர்மையான பக்திக்கு நிகரான பக்தியை உன்மேல் செலுத்த நீ எனக்கு அருள். என் பிரார்த்திக்கும் குரலுக்குப் பின்னே நீ அருகாமையில் உள்ளதை உணர எனக்குக் கற்பி. என் சுவாசத்தினுள் உன் சுவாசத்தினை உணர எனக்குக் கற்பி. என் உணர்ச்சிகளில் உன்னை உணர எனக்குக் கற்பி. என் புரிதலில் உன் ஞானம் உள்ளதென்பதை அறிய எனக்குக் கற்பி. என் வாழ்வில் உன் சர்வவியாபக வாழ்வை உணர எனக்குக் கற்பி. என் புலன்களில் உன் ஒளியை வெள்ளமாகப் பாய்ச்சு. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
116 Prayer-Demand for Devotion.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 19 மார்ச், 2021

166. உன்னைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நாங்கள் வாங்கிவிடலாம். உன்னை எங்களுக்கு வழங்குமாறு இறைஞ்சுகின்றோம்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன்னைத் தவிர மற்ற எல்லாவற்றையும் நாங்கள் வாங்கிவிடலாம். உன்னை எங்களுக்கு வழங்குமாறு இறைஞ்சுகின்றோம்.

கடவுளே, "ஊனுடம்பின் தேவைகள், பசி, மற்றும் லோகாயத சுகங்கள் எனும் பெரும்பாரத்தினால் நீ என்னை பிணைத்துக் கட்டிவைத்துள்ளாய்" என்று நான் புலம்பிக் குறைகூறாமல் இருப்பேனாக.

எப்போதும் வேலையாக இருக்கும் வியாபாரிகளை அதற்காக நான் அவர்களைக் குற்றம் சாட்டமாட்டேன். நீ தேனீயை சுறுசுறுப்பாய் இயங்குமாறு செய்யவில்லையா? மழையினை உயிர்-நல்கும் பயிர்களின் மேல் தவறாமல் பொழிய வைக்கவில்லையா? நீர்சுமக்கும் கருமேக வானக வாகனங்களைக் கொண்டு தாகத்தால் ஏங்கும் பசுஞ்செடிகளின்மேல் உயிர்-நீரைத் தெளிக்கவில்லையா?

தெய்வக்குயவன் இந்த பூமி எனும் மண்ணுருண்டையை வடித்து, அதனைத் தன்பாதையில் தனக்குத்தானே தொடர்ந்து சுழலவைத்துக் கொண்டு, அதனைக் கதிரவனின் கதிரால் கோர்த்து, அது அக்கதிரவனை லயம் தப்பாமல் சுற்றிவருமாறு இடையறாமல் இயக்குகின்றான். 

பெரும்பிரபஞ்சக்குயவன் தனது உயிர்ச் சக்கரத்தைக்கொண்டு அழியக்கூடிய ஊன் பாத்திரங்களாலான பலகோடானுகோடி உருவங்களைப் படைக்கின்றான். அமீபா, சிட்டுக்குருவி, விண்வெளிக்காட்டில் உறுமும் பிரம்மாண்டமான நெருப்புகக்கும் கோளங்கள் - என இவையாவும் அவனது செயல்களில் சிலவற்றைச் செய்யப் பணிக்கப்பட்டுள்ளன.

வானில் தோன்றும் கணநேர வெண்ணெருப்பும் மழை பெய்வதற்கு உதவுகின்றது.

உயிர்களின் அரசே, நீ தான் எல்லாத் தொழிலாளர்களிலும் மிகுந்த சுறுசுறுப்பானவன். ஓர் குருவி கீழிறங்குவதையும் பார்த்துக்கொண்டு, உடற்சதையில் சிறு கீறலையும் குணப்படுத்திக்கொண்டு, வால்நட்சத்திரத்தின் பாதையையும் வகுத்துக்கொண்டே, நீ எப்போதும் கவனத்துடன் இருக்கின்றாய்.

நீ கட்புலனாகா உன் தோற்றத் தொழிற்சாலையிலிருந்து எல்லாவற்றையும் உருவாக்குகின்றாய். உன் இயற்கைப் பொருட்களை உற்பத்தி செய்பவனும் நீயே, விளம்பரப்படுத்துபவனும் நீயே. ஆரோக்கியம், மனோசக்தி, ஞானத் தங்கக்கட்டிகளை எங்களுக்கு விற்கும் நீ தெய்வ விற்பனையாளன்.

நீ எங்களை எல்லாவற்றுக்கும் ஏதோவொரு வழியில் சம்பாவனை கட்டச்செய்கின்றாய்! நாங்கள் எங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக, சுகாதார வாழ்வினை மேற்கொள்ளவும், நல்ல உணவுப் பொருட்களை நாடி உட்கொள்ளவும் நாங்கள் செய்யும் முயற்சியின் மூலம் ஈடுகட்டச் செய்கின்றாய். எங்கள் மனக்குடிலை வெளிச்சப்படுத்தத் தேவையான மின்சார சக்தியை நாங்கள் நாகரீக நாணயங்களைக் கொடுத்து விலைக்கு வாங்குகின்றோம். பக்தியின் தங்கக்கட்டிகளை கொடுத்து உன்னை எங்கள் பிடியில் ஒருக்கால் சிக்குமாறு செய்கின்றோம்.

நாங்கள் மற்ற எல்லாவற்றையும் ஏதாவதொன்றைக் கொடுத்து வாங்கிவிடலாம்; ஆனால் மக்கள் சிலர் உன்னை விலைகொடுத்து வாங்க முயல்வதை நீ நன்கு அறிந்தபோதிலும், நீ மட்டும் விற்பனைக்கு அல்ல என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

விலைமதிக்கமுடியாத ஒன்றே, உன்னை ஒருவராலும் வாங்கமுடியாது; உனக்கு நிகர விலை நிர்ணயிக்கவே முடியாது. 

ஆயினும், நாங்கள் உன் குழந்தைகள் - உன் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ராஜ்ஜியத்திற்கு உரிமையுடைய உன் வாரிசுகள் - என்று அறியும்போது, நீ உன்னை எந்த நிபந்தனைகளுமின்றி வழங்குகின்றாய்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
166 We buy everything but Thee. Pray give me Thyself.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 11 மார்ச், 2021

212. வருங்காலம் முழுவதும் என்னுள்ளே வரையற்ற லயத்தில் நடனமாடியது.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

வருங்காலம் முழுவதும் என்னுள்ளே வரையற்ற லயத்தில் நடனமாடியது.

நான் என் மனத்தின் எண்ணக் கதிரோட்டத்தை, புலன்களின் சிற்றின்ப எல்லைப்பரப்புகளிலிருந்து, வரம்பற்ற தளத்திற்குச் செல்லுமாறு மாற்றி முடுக்கிவிட்டேன். என் கவனத்தின் பிரகாசம் எல்லா திசைகளிலும் பரவி, அது வரம்பற்ற எல்லையைத் தழுவிநின்றது.

நான் வரம்பற்ற எல்லையினுள் ஆழ்ந்திருக்கையில், என் எண்ணம் ஊனுடம்பின் புறத்தோற்றங்களெனும் திரைகளுக்குப் பின்னால் அகப்படவில்லை; மாறாக, நான் வெட்டவெளி தளத்தில் நின்றுகொண்டு பாய்ந்து வரும், ஒளிரும் எண்ண ஓட்டங்களைக் கண்டேன்; மேலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகாலங்களாக உலகில் தோன்றிய மற்றும் இன்னும் தோன்றாத நாகரீகங்களைப் பற்றிய எண்ண அலைகளையும் உணர்ந்தேன். 

வருங்காலம் முழுவதும் என்னுள்ளே வரையற்ற லயத்தில் நடனமாடியது!
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
212 All futurity danced in me the Infinite Rhythm
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 9 மார்ச், 2021

200. தெய்வீக மதகளிப்புகளின் பெருங்கூட்டம் என்னை நாடி விடாமல் வந்துகொண்டேயுள்ளன.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தெய்வீக மதகளிப்புகளின் பெருங்கூட்டம் என்னை நாடி விடாமல் வந்துகொண்டேயுள்ளன.

என்னுடைய வாழ்வை உன்னுடையதுடன் பிணைத்துவிட்டேன், இப்போது என் வாழ்வு இடையறாத பரவசம். இரவு-பகலாய், விழிப்பு-கனவு-ஆழ்ந்தவுறக்க நிலைகளெல்லாவற்றிலும், உன் ஆனந்தவூற்று என்னைக் களிமதப்பில் அமிழ்த்துகின்றது. ஆஹா, என்ன ஆயிற்று எனக்கு?  களிமதப்பின் மேல் மதகளிப்பு! முடிவற்ற, விவரிக்கமுடியாத தெய்வீக மதகளிப்புகளின் பெரும்பொழிவு என் மீது சொரிந்தவண்ணம் உள்ளன. 

பல நூற்றாண்டுகால முதிர்வினால் சுவைசெறிந்த தேன்ரச மதுவே, உன்னை இறுதியில் கண்டுகொண்டேன்; உன் மதுரத்தை என்றும், என்றும், என்றென்றும்  சுவைத்துக்கொண்டே இருப்பேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
200 Endless throngs of Intoxications visit me.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 8 மார்ச், 2021

214. என் அன்பின் ராக்கெட்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் அன்பின் ராக்கெட்.

என் பிராணனை என் உடம்பிலிருந்து உள்ளிழுத்தேன்; என்னை என் உடலுடன் கட்டிவைத்துள்ள மூச்சுக்காற்று மறைந்தது. என் வாழ்வின் அனல்கக்கும் ராக்கெட், அனைத்தையும் காணும் ஒளிக்கண்ணில் தோன்றும் நட்சத்திரம் வழியே பறந்துசென்றது.

பிறகு, என் கொந்தளிக்கும் உணர்வுகளாலான அந்த ராக்கெட் எண்ணற்ற கலனங்களின் இதயங்களில் பரந்துவிரிந்தது; எவராலும் தடுக்கமுடியாத அந்த என் அன்பின் ராக்கெட், இறுதியில் பெரிய வால்நட்சத்திரம் போல பேருணர்வின் ஆழமான வெளியில், உன் சர்வவியாபக அமைதியின் அடியாழத்தின் உள்ளத்துக்குள்ளே சென்று அமிழ்ந்தது.      
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
214 The rocket of my love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 7 மார்ச், 2021

179. என் நரம்புகளைக் குணப்படுத்து; என்னுள் புதிய நரம்பு வயர்களின் மண்டலத்தை பிரதிஷ்டை செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் நரம்புகளைக் குணப்படுத்து; என்னுள் புதிய நரம்பு வயர்களின் மண்டலத்தை பிரதிஷ்டை செய்.

வாழ்க்கையெனும் சிறு ஓடையினருகே உள்ள என் ஆன்மக்குடில் நீ வந்தபோது புன்னகைபூத்தது. ரகசிய எலெக்ட்ரீஷியனே, என் பல வண்ணப் புலன் பல்புகள் உன் ஒளியைப் பிரகாசிக்க மறுக்கின்றன. என் நரம்பு-வயர்கள் ஆரவாரமான வாழ்க்கையின் பெருங்காற்றினால் நைந்து சிதிலமடைந்துள்ளன. நரம்பு மண்டல கட்டுமானத்தையும் ஒளிர்ந்து பரவும் பிராண சக்தியையும் உருவாக்குபவனே, படுகாயப்பட்டு உயிரிழந்த என் நரம்பு வயர்களை மறுமுறை உயிர்ப்பித்து எழச்செய்; உன் கங்குகரை காணா ஆற்றலை அவற்றின்வழியே பாய்ச்சு. அதனால் என் எரியாத எல்லா புலன் பல்புகளும் சட்டென துடித்தெழுந்து உன் புகழொளியை வீசட்டும்.

நான் ஓர் பல்பு; நீ அதில் பிரகாசிக்கும் புனித ஒளி. உண்மையில், நீயே பல்பும், ஒளியுமாக இருக்கின்றாய். இந்த அற்புத உண்மையை நான் உணருமாறு செய்.

என் சிதிலமடைந்த நரம்புகளைக் குணப்படுத்து; உன் ஒளியின் தெய்வீக ஜோதியை என் நோயினால் பீடிக்கப்பட்ட சதைப்பிண்ட பல்பின் வழியே வெள்ளமாய் செலுத்து.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
179 Heal my nerves and install in me a new set of telephonic nerves.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 6 மார்ச், 2021

193. உன் சர்வவியாபகப் பேருணர்வே நோயாளிகளில் துன்பப்படுகிறது என்பதைக் காண எனக்குக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் சர்வவியாபகப் பேருணர்வே நோயாளிகளில் துன்பப்படுகிறது என்பதைக் காண எனக்குக் கற்பி.

உன் கருணையையும் ஞானத்தையும் நல்லவிதமாக உபயோகிக்கத் தவறியிருந்தால், நான் ஒரு முடவனாகவோ, தொழுநோயாளனாகவோ, குருடனாகவோ இருந்திருப்பேன் என்பதை உணர எனக்குக் கற்பி; அப்படி ஒருக்கால் நான் முடவனாகவோ குருடனாகவோ ஆவதற்கு பாத்திரமாக இருந்திருந்தால், நான் அவற்றிலிருந்து குணமாக முழுமுனைப்புடன் ஏங்கியிருப்பேன்.

அதனால், முடங்கியோ, சோகத்தால் பீடிக்கப்பட்டோ இருக்கும் மனிதர்களை  நான் எப்பொழுதெல்லாம் காண்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் உன் சர்வவியாபகப் பேருணர்வே அந்த மனிதரூபங்களில் துன்பப்படுகிறது என்பதை எனக்கு நன்கு உணரச்செய்; என் உடலில் குடிகொண்டிருக்கும் ஆரோக்கியத்தையும், சாந்தத்தையும் அவர்கள் உடலிலும் பிரதிஷ்டை செய்ய எனக்குக்கற்பி.

பிறருடைய கதறல்கள், ஏக்கங்கள், துன்பங்கள்மேல் நான் பச்சாதாபம் கொள்ள எனக்குக்கற்பி; அதன்மூலம் நான் இவைகளிலிருந்து விடுபட எப்படிப் போராடுவேனோ, அப்படி அவர்களுக்காகவும் போராடுவேன்.

அனைவருக்காகவும் நான் ஏங்கி, போராடி, அழுது, மற்றும் நகைத்து, என் மகத்தான ஆன்மாவை இறுதியில் எல்லோரிலும் காண்பேனாக.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
193 Teach me to see Thine Omnipresent Spirit suffering in the sick.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 5 மார்ச், 2021

164. உன் பனித்துளியான என்னை உன் கடலில் சங்கமம் செய்; சங்கமிப்பது என்னை இழப்பதற்காக அல்ல, ஆனால் விரிவாக்குவதற்காக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் பனித்துளியான என்னை உன் கடலில் சங்கமம் செய்; சங்கமிப்பது என்னை இழப்பதற்காக அல்ல, ஆனால் விரிவாக்குவதற்காக.

மயக்கும் புலனின்பங்களாம் தாமரையிலை மீது சறுக்கிச்சென்று, உன் ஒளிரும் ஞான சாகரத்தில் ஆழும், உன் அன்பினில்-தோய்ந்த பனித்துளிகள் போல் நான் ஆக எனக்குக்கற்பி.

கடந்த-நிகழ்-வருங்கால இலையின்மேல் விளையாடும் நான் உன் அழிவற்ற பனித்துளி.

ஆசையின் தாகத்துளைகள் என் பலத்தை உறியாமல் இருக்க, என் மனம் ஓடும் பாதையில் விவேகக் களிம்புடன் கூடிய எண்ணெய்விட்டுப் பராமரித்துள்ளேன்.

உன் கரையற்ற கடலில், அதிர்ந்துகொண்டே மிதக்கும் பொய்ம்மையான பிறப்பு-இறப்பு இலையின்மீது தத்தளித்துக் கொண்டிருக்கும் நான் உன் ஊதாரிப் பனித்துளி. உன் பொறுப்பற்ற பனித்துளியான நான் இறுதியில் வீடுநோக்கித் திரும்புகின்றேன்.

இந்த நடனலயம் முடிந்தபின், உயரச்செல்லும் பிறப்பின் காலடிகளும், கீழேவிழும் மரணக் கூட்டிசையின் காலடிகளும் ஓய்ந்தபின், உன் கடலுக்குள் நான் வழுக்கிக் கொண்டு வந்துசேர்வேன். 

நான் என்னை இழக்கவிரும்பவில்லை - இந்த சின்னஞ்சிறு பனித்துளியின் ஒரே ஆசை என்னவெனில், உன்னோடு சேர்ந்ததினால் நான் நிரந்தரத்தின் மாபெரும் பனித்துளியாக ஆகவேண்டும் என்பது மட்டுமே.

கடவுள் நாட்டம் கொண்ட எல்லா உதடுகளினாலும் பருகப்படும் நான் ஒரு வானவில்-வண்ணம்கொண்ட சர்வவியாபக பனித்துளியாக இருப்பேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
164 Slip Thy dewdrop in Thy Sea, not to lose itself, but to enlarge itself. 
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 2 மார்ச், 2021

61. மனித ஆன்மத் தோட்டத்தில் வளரும் நற்பண்பு மலர்களிலிருந்து தேனை எடுத்து, என் இதயத் தேன்கூட்டில் சேகரிக்க எனக்குக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

மனித ஆன்மத் தோட்டத்தில் வளரும் நற்பண்பு மலர்களிலிருந்து தேனை எடுத்து, என் இதயத் தேன்கூட்டில் சேகரிக்க எனக்குக் கற்பி.

வாழ்வின் வளமான கோடைக்காலத்தில், மனித ஆன்மத் தோட்டத்தில் வளரும் நற்பண்பு மலர்களிலிருந்து தேனை எடுத்து சேகரிக்க எனக்குக் கற்பி.

சுகந்தமான மன்னிக்கும் குணம், நறுமணங்கமழ் பக்தி, தாமரை-இதய மலர்களின் அரிய சாரம் போன்றவைகளைக் கொண்ட பல லட்சக்கணக்கான ஆன்ம மலர்களிலிருந்து எடுத்த மணமான தேனை என் இதயத் தேன்கூட்டில் நான் சேகரிப்பேன். 

வாழ்வின் மங்கிய குளிர்காலப் பனிபெய்யும் பாகத்தில், என் பூலோகவாசம் முடியும் தருணத்தில், சேகரித்துவைத்த என் பக்தித்தேனை நீ அடிக்கடி வந்து புகுந்து திருடிச் செல்லும் அந்த என் இதயத் தேன்கூட்டினுக்குள், நான் புகுந்து மறைந்து கொள்வேன். 

நீ எங்கு வந்துள்ளாயோ - எந்த இடத்தில் உன் காலடிமண் பட்டுப் புனிதமடைந்ததோ - அந்தவிடத்தில் நான் படுத்துக்கிடப்பேன். உன் காலடிச்சுவடுகளின் ஆழத்தில் என் பாதுகாப்பான உறைவிடத்தைக் கண்டு கொள்வேனாக.    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
61 Teach me to store honey of quality from all soul-flowers in the honeycomb of my heart.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!