வெள்ளி, 26 மார்ச், 2021

162. தறிகெட்டப் புலன்களினைக் கட்டுப்படுத்துவதற்காக உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தறிகெட்டப் புலன்களினைக் கட்டுப்படுத்துவதற்காக உரிமையுடன் வேண்டுதல்.

பேருணர்வே, என் தணியாத புலனாசைகள் தவறான செயல்களால் ஊட்டப்படாமல் இருக்கட்டும். அவைகள் என் நிஜமான இன்பத்தை மட்டுமே நாடுமாறு கட்டுப்படுத்த எனக்குக் கற்பி. என் புலன்கள் தறிகெட்டுப் போனால், அவைகளின் ஆசைகளை ஒத்துழையாமையெனும் தடி கொண்டு நிர்வகித்து, அவைகளை முழுமைபொருந்திய செயல்களில் வழிநடத்த எனக்குக் கற்பி. 

மின்சாரம் எப்படி ஒரு கட்டிடத்தை ஒளிபெறச் செய்யவும் அல்லது அதனை அழிக்கவும் உபயோகப்படுமோ, அதேபோல், மனிதசக்தி ஒருவரின்  வாழ்வைப் புகழ்பெறவும் அல்லது சீர்குலைக்கவும் வைக்க முடியும். அதனால், நீ ஒப்படைத்தளித்த என் கட்டுக்குளுள்ள ஆற்றல்களை நான் அறிவுடன் நிர்வகிக்கக் கற்றுக்கொண்டு, இருமுனை வீர்யமுடைய என் உடைமைகளை நல்லவற்றிற்கு மட்டுமே பயன்படுமாறு உபயோகிப்பேனாக.

பலநாக்குத் தணல்களாய் எரியும் என் பேராசைத் தீயை ஞான வெண்ணெருப்பினால், அவைகளுடன் அவைவிடும் சாம்பலையும் பொசுக்கி அழிக்கட்டும்.  

என் எல்லா தறிகெட்டப் புலன்களும் ஆனந்தமாய் உன் நெறிப் பிரகாரம்  இயைந்து ஒழுகும் வரை, பேருணர்வே, உன் இச்சையுடன் இயைந்து ஒழுகி, என் சிறு இசைப்பகுதியை வாசித்து, என் சிறு கடமையை ஆற்றி, என் சிறு கீதத்தைப் பாடி ஒத்துழைப்பேனாக.

என் புலன்விழைவுகள் ஆன்மவிழைவுகளாக உருமாறட்டும். பேருணர்வே, உன் விருப்பத்தின் பாதையிலிருந்து புலன்கள்பக்கம் நான் ஒருக்கால் தவறி நழுவ நேர்ந்தால், உன் ஒழுக்கமெனும் செங்கோலை நான் உணருமாறு செய்வாயாக.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
162 Demand for control of the unruly senses.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: