வெள்ளி, 4 ஜூன், 2021

205. ஒரே மெய்ஞ்ஞான உயர்வழிச்சாலையை அடைய உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஒரே மெய்ஞ்ஞான உயர்வழிச்சாலையை அடைய உரிமையுடன்-வேண்டுதல்.

கலங்கரை ஒளிவிளக்கே, சுகந்தமலரே, எங்கள் புலன்களை விழிப்புறச்செய்!

"தேவலோக வேட்டைநாய்"* மோப்பம் பிடிப்பது போல, எங்களையும் நேரே உன்னிடம் கொண்டுசெல்லும் அந்த ஒரே மெய்யுணர்வு வேகவழிச்சாலைக்கு விரைவாக இட்டுச் செல்லும் சரியான அணுகுசாலையை நாட வைப்பாயாக. 

அணையா கலங்கரை ஒளி விளக்கே, உன் ஒளிரும் வெளிச்ச விரலை எங்கள் அறியாமை இருளின்மேல் காட்டு; அதன்மூலம் வழிதவறாமல், தாமதமின்றி நாங்கள் சரியான வழியை கண்டுகொள்ள முடியும்.

எந்த மரபு வழிபாட்டு நெறியைப் பின்பற்றினாலும், எங்களை இறுதியில் உன்னிடம் கொண்டுவிடும் பொதுவான விவேகஞான உயர்வழிச்சாலைக்கு வழிநடத்து.

குறுகிய கொள்கைப் பிடிவாதமெனும் சந்துகளுக்கும், விட்டுக்கொடுக்காத மனச்சாய்வு சுவர்களுக்கும் மேலே, எங்கள் உள்ளங்கள் உன் மேன்மையாக்கும் விமானத்தில் பாதுகாப்பாகப் பயணிக்கட்டும்.  இறுதியில், அனைத்துப் பிரபஞ்சமும் கூடும் பொது வழிபாட்டுக்காக நாங்கள் (மனிதனால் உருவாக்கப்பட்ட, விளக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட நம்பிக்கைகள், குறுக்கல்களால் தடுக்கப்பட முடியாத) சுதந்திரமான வானவெளிக் கோயிலில் சந்தித்து, எங்கள் இதயங்களின் எல்லா புனித மந்திரங்களையும் கொண்டு உன் சர்வவியாபக சாந்நித்தியத்திற்கு நாங்கள் ஓதுவோமாக!

முக்திபெறுவதற்கான விஞ்ஞானபூர்வ வழிமுறைகளையும், விஞ்ஞான-தாயகத்தின் ஒளியில் பிறந்த குழந்தையான மெய்யுணரும் ஆன்மநெறியையும் எங்களுக்குக் கற்பி. 

ஸ்தூல விமானங்கள் பறக்கும் இந்த யுகத்தில் செய்வதுபோல, எங்கள் இரும்புப்பறவை விமானங்களை பனிமூட்டம் மற்றும் இரவினிருள் தடைகளை ஊடுருவி, ஒரு கட்டுப்பாட்டறை கோபுரத்திலிருந்து மற்றொன்றிற்கென மனித-நெறிமுறைப்படி இயங்கும் ஒளிரும் மின்சார திசைகாட்டியைப் பின்பற்றி, ஒரு ஊரிலிருந்து மற்றொன்றிற்கு, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொன்றிற்கு, ஒரு நாட்டிலிருந்து மற்றொன்றிற்கென பாதுகாப்பாய் வழிநடத்துவோமாக. 

பெருஞ்ஜோதி விளக்கே! எங்கள் அறியாமையிருளை ஊடுருவிச்சென்று வழிகாட்ட உன் இனிய மணங்கமழ் ஞானப்பிரகாசக் கதிரை அனுப்பி வை; அதன்மூலம் நாங்கள் சீக்கிரமாகவும், பாதுகாப்பாகவும் ஒரு இறங்குமிடத்திலிருந்து மற்றொன்றிற்கு, ஒரு ஜென்மத்திலிருந்து மற்றொன்றிற்கென எங்கள் ஆன்மவழியைக் கண்டுகொண்டு பயணிப்போமாக.

மேலும், சுகந்த மலரே! நாங்கள் மெய்ஞ்ஞான கோளத்தில் முன்னேறுகையில் எங்களை எல்லாப் பொழுதிலும் உற்சாகமூட்ட உன் அன்பின் சுவாசக் காற்றை அனுப்பி வை; அதன்மூலம், உன் வானத் தோட்டம் எங்கள் கற்பனைக்கு எட்டி, தணியாமல் உன்னைத் தேடும் எங்கள் தாகமான எங்கள் ஆன்ம பயணங்களை விரைவுபடுத்துவோமாக.  

---
தேவலோக வேட்டைநாய் - "The Hound of Heaven" எனும் தலைப்பில் பிரான்சிஸ் தாம்ப்ஸன் இயற்றிய செய்யுள், ஜீவர்களின் [குறிப்பாக தவறிழைப்பவர்களின்] மேலுள்ள கடவுளின் தீவிரமான அன்பை, ஒரு வேட்டைநாய் முயலைத் துரத்துவது போன்ற உருவகத்தில் சித்தரிக்கின்றது.
---
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
205 Prayer-Demand to reach the One Highway of Realization.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: