வியாழன், 30 டிசம்பர், 2021

227. நான் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போது உன்னை அமைதிவுருவாய் உணருமாற்றை எனக்குக்கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போது உன்னை அமைதிவுருவாய் உணருமாற்றை எனக்குக்கற்பி.

இறைத்தந்தையே, நான் கேட்பதை சரியாகப் புரிந்துகொள்ளும் தன்மையை எனக்குக்கற்பி. நான் கற்கும் அனைத்து நல்விஷயங்களையும் என் அன்றாட வாழ்க்கையில் நான் பயில்வதற்கு உதவு. உன்னை இயற்கையின் செயல்களில் காணுமாற்றை எனக்குக்கற்பி. நான் கண்களை மூடிக்கொண்டிருக்கும்போது உன்னை அமைதிவுருவாய் உணருமாற்றை எனக்குக்கற்பி. உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன் - ஓம்! ஆமென்!
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
227 Teach me to feel Thee as silence when I close my eyes.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 29 டிசம்பர், 2021

226. பிறர் இன்பத்தில் என் சந்தோஷத்தை நாடுமாறு எனக்குக்கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிறர் இன்பத்தில் என் சந்தோஷத்தை நாடுமாறு எனக்குக்கற்பி.

தெய்வத்தாயே, நான் பிறரை நேசிக்கவும், அவர்களுக்கு நான் சேவையாற்றவும் எனக்குக்கற்பி. பிறர் என்னிடம் உண்மையாக இருப்பதை விரும்புவதைப் போல, நானும் பிறரிடம் வாக்குத் தவறாமல் உண்மையாக இருக்குமாறு எனக்குக்கற்பி. பிறர் என்னை நேசிப்பதை நான் விரும்புவதைப் போல, நானும் பிறரை நேசிக்குமாறு எனக்குக்கற்பி. தாயே, பிறரை நான் மகிழ்வித்து, அவர்களைப் புன்னகைப் பூக்க வைக்குமாறு எனக்குக்கற்பி. தாயே, பிறர் இன்பத்தில் என் சந்தோஷத்தை நாடுமாறு எனக்குக்கற்பி. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
226 Teach me to find happiness in the joy of others.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 28 டிசம்பர், 2021

225. நான் சூரியவொளியிலும், தென்றல்காற்றிலும், விடியற்பொழுதிலும், அன்புநண்பர்களின் இதயத்திலும் உன்னைக் கண்டு சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் சூரியவொளியிலும், தென்றல்காற்றிலும், விடியற்பொழுதிலும், அன்புநண்பர்களின் இதயத்திலும் உன்னைக் கண்டு சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.

பிரியமான இறைத்தந்தையே, எனக்குத் தாகமாக இருக்கும்போது தண்ணீரைப்  பருகுகிறேன், ஆனால் நீதான் அதன்மூலம் உயிரூட்டும் சக்தியை எனக்குத் தருகின்றாய். குளிக்கும்போது நான் புத்துணர்வு பெறுகின்றேன், நீதான் உன் தூய்மையாக்கும், புத்துணர்வூட்டும் சக்தியை நீருக்கு அளித்துள்ளாய் என்பதை நான் உணர்கின்றேன். என் முகத்தில் சூரியவொளி விழும்போது, உனது போஷிக்கும் கதகதப்பினால் என்னைத் தொடுவதாக உணர்கின்றேன். நான் சூரியவொளியிலும், தென்றல்காற்றிலும், விடியற்பொழுதிலும், மத்தியானத்திலும், சந்தியாகால ஒளியிலும், அன்புநண்பர்களின் இதயத்திலும் உன்னைக் கண்டு சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
225 I bow to Thee in the sunshine, breeze, dawn, and hearts of loving friends.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 26 டிசம்பர், 2021

224. நீ தான் எல்லாவற்றிற்கும் காரணியாக இருக்கின்றாய். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நீ தான் எல்லாவற்றிற்கும் காரணியாக இருக்கின்றாய். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.

பிரியமான இறைத்தந்தையே, என்னை இருளிலிருந்து விடுவிக்க நிலவொளி வருகின்றது. எனக்கு கதிரொளி நல்க பகலவன் வருகின்றது. எனக்கு உணவை அளிக்க தட்பவெப்ப காலங்கள் (ருதுக்கள்) வருகின்றன. ஆனால் நீ தான் இவைகளின் இயக்கக் காரணியாக இருக்கின்றாய். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
224 Thou art the cause of everything - I bow to Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 25 டிசம்பர், 2021

223. என் பெற்றோரும் நண்பர்களும் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் பெற்றோரும் நண்பர்களும் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால்.

பிரியமான இறைத்தந்தையே, என் பெற்றோர் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால். என் நண்பர்கள் என்னை நேசிக்கின்றனர், ஏனெனில் நீ என்னை நேசிப்பதனால். நான் என் நாட்டை நேசிக்கின்றேன், ஏனெனில் நீ அதனை நேசிப்பதனால். உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
223 My parents and friend love me, dear Father, because Thou do love me.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

222. நீ இயல்பாகவே எல்லாவிடங்களிலும் இருக்கின்றாய், உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நீ இயல்பாகவே எல்லாவிடங்களிலும் இருக்கின்றாய், உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.

பிரியமான இறைத்தந்தையே, நான் அலைகள்மீது விளையாடும்போது, நான் உன்னுடன் விளையாடுகின்றேன். வானத்தில் நீ அழகிய வர்ணக் கோலமிடுவதை நான் ஒவ்வொரு நாளும் பார்க்கின்றேன். நீ பசும்புல்லினால் வெற்றுநிலத்தைப் போர்த்துவதை நான் காண்கின்றேன். நீ சூரியவொளியிலே இருக்கின்றாய். கடவுளே, நீ இயல்பாகவே எல்லாவிடங்களிலும் இருக்கின்றாய்! உன்னை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
222 Thou art so plainly present everywhere, I bow to Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 24 டிசம்பர், 2021

221. உறங்கும்போது நீ சாந்த உருவிலும், விழித்திருக்கும்போது நீ ஆனந்த உருவிலும் என்னிடம் வரவேண்டும்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உறங்கும்போது நீ சாந்த உருவிலும், விழித்திருக்கும்போது நீ ஆனந்த உருவிலும் என்னிடம் வரவேண்டும்.

பிரியமான இறைத்தந்தையே, நான் உறங்கும்போது, சாந்த உருவில் நீ என்னிடம் வரவேண்டும். நான் விழித்திருக்கும்போது, ஆனந்த உருவில் நீ என்னிடம் வரவேண்டும். நான் என் நண்பர்களை நேசிக்கும்போது, அன்பு உருவில் நீ என்னிடம் வரவேண்டும். நான் ஓடிவிளையாடும்போது, என்னுடன் நீயும் சேர்ந்து ஓடி வரவேண்டும். நான் சிந்திக்கும்போது, என்னுடன் நீயும் சேர்ந்து சிந்திக்கவேண்டும். நான் இச்சாசக்தியை பிரயோகிக்கும்போது, என்னுடன் நீயும் சேர்ந்து இச்சாசக்தியை பிரயோகிக்கவேண்டும். நீ என் அருகிலேயே இருப்பதால், நல்வழியில் நான் சிந்திக்கவும், விளையாடவும், ஒழுகவும், இச்சாசக்தியை பிரயோகிக்கவும் எனக்குக்கற்பி. நீ என் நலத்தை-விரும்புபவர்களில் மேன்மையானவராதலால், நான் உன் வழிகாட்டுதலின்படி நடக்க விரும்புகின்றேன். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
221 Come to me as Peace in sleep and as Joy when I am awake.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

220. எல்லோருக்கும் என் புன்னகைதவழ் முகத்தைக் காண்பிக்குமாறு எனக்குக்கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லோருக்கும் என் புன்னகைதவழ் முகத்தைக் காண்பிக்குமாறு எனக்குக்கற்பி.

இறைத்தந்தையே, நான் எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் என் புன்னகைதவழ் முகத்தைக் காண்பிக்குமாறு எனக்குக்கற்பி. மற்றவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்காமலிருக்க எனக்குக்கற்பி. மற்றவர்களை புன்னகையாலும் துன்பப்படுத்தாமலிருக்க எனக்குக்கற்பி. எப்படி நான் சந்தோஷமாக இருக்க விரும்புவேனோ, அப்படியே மற்றவர்களையும் நான் சந்தோஷப்படுத்துமாறு எனக்கு அருள்புரி.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
220 Teach me to give smiles to all.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 23 டிசம்பர், 2021

219. என் எல்லா நண்பர்களையும் நேசிப்பதன்மூலம் உன் அன்பைக் காண்பேனாக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் எல்லா நண்பர்களையும் நேசிப்பதன்மூலம் உன் அன்பைக் காண்பேனாக.

தெய்வத்தாயே, என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா பால்ய நண்பர்களையும் நான் நேசிக்குமாறு செய். என் எல்லா நண்பர்களையும் நேசிப்பதனால், எல்லா இதயங்களிலும் உன் அன்பையே காண்பேனாக. என்னை நேசிப்பவர்களை  நான் நேசிக்க எனக்குக்கற்பி; அதை விட, என்னை நேசிக்காதவர்களுக்காக நான் நெஞ்சுருகிப் பிரார்த்திக்குமாறு எனக்குக்கற்பி. அவர்கள் அனைவரும் என் சகோதர, சகோதரிகள் என்ற காரணத்தினால் நான் அவர்களை நேசிப்பதில் மகிழ்ச்சியடைவேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
219 By loving all friends may I find Thy love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 22 டிசம்பர், 2021

218A. என் தாய் என்னை நேசிப்பதனால், நீயே அன்புருவாக உள்ளாய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் தாய் என்னை நேசிப்பதனால், நீயே அன்புருவாக உள்ளாய்.

கடவுளே, என் தாயும், என் தந்தையும் என்னை நேசிப்பதனால், அன்பே நீ என்பதை நான் அறிவேன்: நீயே ஆதிமூலமான என் தந்தையும் தாயும். நீ என் நண்பர்கள் இதயத்தில் இருப்பதாலேயே தான் அவர்கள் என்னை நேசிக்கிறார்கள்: நீயே என் தலைசிறந்த நண்பன். நீயே என் குரு; நீ எப்படி என்னை நேசிக்கின்றாயோ, அப்படி நான் உன்னை நேசிக்க எனக்குக்கற்பி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
218A Thou art Love because my mother loves me.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 21 டிசம்பர், 2021

217. சிறைப்பட்டிருந்த சர்வவியாபகப் பறவை திறந்து விடப்பட்டது.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சிறைப்பட்டிருந்த சர்வவியாபகப் பறவை திறந்து விடப்பட்டது.

தியானத்தின் கதவுகள் வழியாக, சிறைப்பட்டிருந்த சர்வவியாபகப் பறவை திறந்து விடப்பட்டது. அது வெளியே பறந்து சென்று, தனது இறக்கைகளை எல்லையற்ற ஆகாசத்தில் விரித்தது. துன்பத்தால்-வாட்டப்பட்ட எல்லா உயிர்களின் மீதும் அதன் ஆனந்த இறக்கைகளின் சாந்த நிழலை வீசியது. 

பின், அந்த சொர்க்கலோகப் பறவை திரும்ப தனது சிறு கூண்டெனும் பழைய பழக்கங்களின் எண்ணங்களை நினைவுகூர்ந்தது; உடனே, அது தனது இறக்கைகளை மடக்கிக் கொண்டு, லோகாயதத் தன்மைகொண்ட அந்த இரும்புக்கம்பிகளுக்குப் பின்னே சென்று முடங்கியது.

நிரந்தரத்தின் பறவையே, சித்திரவதைப்படுத்தும் கனவுகளாலான உன் சிறு கூண்டை உடைத்துத் தள்ளிவிட்டு, எல்லாவற்றிலும் குடிகொண்டுள்ள உன் சர்வவியாபகக் கூட்டிற்குப் பற. 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
217 The imprisoned Bird of Omnipresence was released.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 20 டிசம்பர், 2021

216. பரஞ்ஜோதித் தாமரையே, உன் இதழ்ப் பாதங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்!

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பரஞ்ஜோதித் தாமரையே, உன் இதழ்ப் பாதங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்!

பரஞ்ஜோதித் தாமரையே, உன் இதழ்ப் பாதங்களுக்கு கோடி நமஸ்காரங்கள்! உன் பாதத்தில் என் இதயத்தை முழுமையாகச் சமர்ப்பிக்கின்றேன். உன் பாதத்தில் என் ஆன்மாவை முழுமையாகச் சமர்ப்பிக்கின்றேன். சர்வவியாபகமான உன் பாதத்தில் என் அன்பின் மணமான கஸ்தூரி கந்தத்தை முழுவதுமாகச் சமர்ப்பிக்கின்றேன். 

அருமையான அருளாளனே, என் இதயத்தின் இருள்கவ்விய மூலைகளில் உன் ஆனந்த கானத்தை எப்போதும் இசைப்பாயாக.

நான் முழுதுமாக உன்னவனே! நான் என்றென்றும் உன்னவனாகவே இருப்பேன்! என் மறவா நினைவின் பொற்சிமிழுக்குள் உனது காக்கும் அன்பினை நான் எப்போதும் வைத்துக் கொண்டிருப்பதால், எல்லா பயங்கரங்களையும் கண்டு நான் எள்ளி நகைப்பேன்.

என் அனைத்து ஆசைகளையும், உலக சுகங்களையும் உன் வேள்வித்தீயில் இட்டு, உன்மேலுள்ள என் பக்திக்கு காணிக்கையாக சமர்ப்பிப்பேன். என் கற்பனையின் நிழல்கள் மற்றும் அச்சங்கள் அனைத்தையும், உன் அருட்ஜோதியில் சுட்டெரிப்பேன். உன் அருட்ஜோதியில் நான் எப்போதும் விழித்திருந்து, உன் அரிய, சர்வவியாபக முகத்தை என் உன்னிப்பான கண்களால் யுகாந்தரமாக என்றும் நிரந்தரமாய் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.

உன் அன்பு என் பக்தி கோயிலில் எப்போதும் பிரகாசிக்கட்டும், அதன்மூலம் நான் எல்லா இதயங்களிலும் உன் அன்பினை விழிப்புறச் செய்வேனாக.   

கடவுளே! என் ஆன்மாவை உன் கோயிலாக்கிக் கொள்! என் இதயத்தை உன் பீடமாக்கிக் கொள்! என் அன்பினை உன் இல்லமாக்கிக் கொள்!    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
216 A million salutations at Thy petaled feet, O Lotus of Light.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

209. நீ உன் பேசும் மௌனத்தின் குளிர்மதிக் கிரணங்களைக் காண்பித்தாய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நீ உன் பேசும் மௌனத்தின் குளிர்மதிக் கிரணங்களைக் காண்பித்தாய்.

தெய்வத்தாயே, ரோஜாப்பூவின் பேசும் மணத்தில் உன் குரலைக் கேட்டேன். என் பக்தியின் சன்னமாக முணுமுணுக்கும் பிரார்த்தனைகளில் உன் குரலைக் கேட்டேன். என் ஆரவாரிக்கும் எண்ணங்கள்போடும் இரைச்சல்களின் அடியிலும் உன் குரலைக் கேட்டேன்.  உன் அன்பே தான், நட்பின் குரல் மூலமாகப் பேசியது. உன் மிருதுவான தன்மையை நான் அல்லிமலர்களின் மென்மையில் தொட்டுணர்ந்தேன். 

தெய்வத்தாயே, விடியலைப் பிளந்து, எனக்கு உன் ஒளிமுகத்தைக் காட்டு! பகலவனைப் பிளந்து, உன் சக்திமுகத்தைக் காட்டு! இரவினைப் பிளந்து, எனக்கு உன் சந்திரவதனத்தைக் காட்டு! என் எண்ணங்களைப் பிளந்து, உன் ஞானமுகத்தைக் காட்டு! என் உணர்வுகளைப் பிளந்து, உன் அன்புமுகத்தைக் காட்டு! என் மானத்தைப் பிளந்து, உன் பணிவுமுகத்தைக் காட்டு! என் ஞானத்தைப் பிளந்து, உன் பூர்ணமுகத்தைக் காட்டு!

நான் தனிமையின் திக்கற்ற தவிப்பில் உன்னை வேண்டி ஓலமிட்டபோது, அருணோதயத்தில் நீ வெளிப்பட்டு, ஆனந்தத்தால் என்னை வாழ்த்தி வரவேற்றாய். குழம்பாய்க் கொதிக்கும் கதிரவனின் கதவுகளின் வழியே  நீ தோன்றி, என் உயிரின் துவாரங்கள் வழியே உன் ஆற்றலை ஊட்டுவித்தாய்.  என் அறியாமை இரவினை நீ கிழித்துக்கொண்டு, உன் பேசும் மௌனத்தின் குளிர்மதிக் கிரணங்களைக் காண்பித்தாய். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
209 Thou didst reveal Thy silver rays of speaking Silence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 18 டிசம்பர், 2021

204. மத வேறுபாட்டுணர்வுகளின் பாதிப்பிலிருந்து எங்களைக் காப்பாயாக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

மத வேறுபாட்டுணர்வுகளின் பாதிப்பிலிருந்து எங்களைக் காப்பாயாக.

எங்கள் அனைவரின் ஒரே தந்தையே, நாங்கள் உன் ஜோதித் தலத்தை நாடி பல நிஜமான பாதைகளில் பயணிக்கின்றோம்.

பல்வேறு மதங்கள் எல்லாம் உன் ஒரு உண்மை மரத்தின் கிளைகள் என்பதை நாங்கள் உணருமாறு செய். பலதரப்பட்ட ஆகம உபதேசங்களெனும் கிளைகள் அனைத்திலிருந்தும் தொங்கும், பிரக்ஞானத்தால் சோதிக்கப்பெற்ற, கனிந்த, சுவையான ஆன்ம-ஞானப் பழங்களை நாங்கள் சுவைத்து இன்புற எங்களுக்கு அருள்புரி. 

ஒன்றேயான உன் அமைதிக் கோயிலில், நாங்கள் பல்வேறு குரல்களினால் இயைந்த ஒரே இன்னிசையாய் உனைநோக்கிப் பாடுகிறோம். உன்மேல் கொண்ட எங்கள் அன்பினுடைய பல வெளிப்பாடுகளை, நாங்கள் ஒருமித்த இயைபுடன் இசைக்க எங்களுக்குக் கற்பி. அந்த ஆன்ம கீதத்தின் மூலம் நீ உன் அமைதிச் சபதத்தை விட்டு, எங்களை அழிவற்றதும், பிரபஞ்ச நோக்குடன் புரிதலும் உடைய உன் மடியில் தூக்கி அமர்த்திக் கொள்வாயாக. அதன்மூலம் எங்கள் எல்லா மென்மையான பாடல்களிலும் உன் பாடலின் சாரத்தைக் கேட்போமாக.     
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
204 Save us from religious bigotry.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 17 டிசம்பர், 2021

201. எல்லா நற்குண மீன்களையும் ஒளிவிளக்கு பொருத்திய வலைகளால் பிடிக்க எனக்குக்கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லா நற்குண மீன்களையும் ஒளிவிளக்கு பொருத்திய வலைகளால் பிடிக்க எனக்குக்கற்பி.

நெடுங்காலத்திற்கு முன் நான் ஒரு மனோ டார்ச்விளக்கை உபயோகம் செய்து கொண்டிருந்தேன். அதனைக் கணத்திலே வேலைபார்க்குமாறு செய்வேன், உடனே அது தேடும்-ஒளிக்கீற்றை வீச ஆரம்பிக்கும். அவ்வொளியில் நான் தேடிப் பலப்பல பொன்னிறமாய் ஜொலிக்கும் ஆக்கப்பூர்வ-சிந்தனைப்-பொடிமீன்களை பிடித்துள்ளேன்.

அவற்றைத்  தூண்டில்புழுவாக வைத்து என் உணர்வுநிலைக் கடலிலுள்ள பெரிய கடல்வாழினங்களையும் பிடித்துக் கொண்டிருந்தேன். அங்கு ஒரே இருட்டாக இருக்கும், மேலும் என் விளக்குபொருந்திய வலையின் சுற்றளவு சிறிதாக இருந்ததால், பல நயமான வகைகள் நழுவிவிட்டன. 

இப்போது, நான் பல டார்ச்விளக்கு-வலைகளை அடுக்கி ஒரு கட்டாக சுமந்துசெல்கின்றேன். அவைகளை நான் எல்லோரிடமுமிருந்து, பொன்னால் பின்னப்பட்ட கனவுகளினாலும், வெள்ளியினாலான பாடல்களினாலுமான அரிய நாணயங்களைக் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளேன். எண்ணற்ற இந்த விளக்குபொருந்திய இழு-வலைகளை எல்லாம் ஒருங்கே பின்னி, நான் உன் ஞானக் கடலில் வலைவீசுவேன். பார்! உன் இன்னும் பிறவா நற்குணங்களெனும் முட்டைகள், பிரகாசிக்கும் உணர்வுகளினாலான பொடிமீன்- கூட்டங்கள், பொன்மய செயல்கள் - இவையனைத்துடன் இறுதியாக உன்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு வருவேன்! 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
201 Teach me to fish for all goodness in the net of searchlights.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 16 டிசம்பர், 2021

199. நான் பல ஜென்மங்களெனும் மரங்களில் தங்கியிருந்து, உன் பாடல்களைப் பாடியுள்ளேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் பல ஜென்மங்களெனும் மரங்களில் தங்கியிருந்து, உன் பாடல்களைப் பாடியுள்ளேன்.

சொர்க்கத்தின் குயிலான நான் பல ஜென்மங்களெனும் மரங்களில் தங்கியிருந்து, உன் பாடல்களைப் பாடியுள்ளேன்.

என் பாடல்கள் ஆன்ம-இலைகளின் பசுமை-பொதிந்த நரம்புகளினுள்ளே உன் உயிர்ச்சக்தியைச் செலுத்தி அவைகளைத் துடிப்புடன் அசையவைத்தன.  பல நூற்றாண்டுகாலத் தோட்டங்களில், உறங்கும் ஆன்மாக்களை விழிப்புறச்செய்து உன்னிடம் சேர்க்க, உன் பாடல்களைப் பாடியுள்ள குயில் நான். 

நல்லிதயங்களின் தோட்டங்களில் உன் பாடல்களைக் கச்சேரி செய்துகொண்டு நான் பயணிக்கின்றேன். நான் மீண்டும் மீண்டும் வருவேன், வந்து வழிதவறிய கானக்குயில்களைக் கவர்ந்து, உன் பாடல்களைக் கற்றுத்தந்து, உன் பிரபஞ்ச சுதந்திரமெனும் வான்வெளியில் அவர்களுடன்  சேர்ந்து நானும் பறப்பதற்காக மீண்டும் வருவேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
199 I perched in many trees of lives and sang Thy songs.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 15 டிசம்பர், 2021

198. உன் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் என்னைத் தாலாட்டித் தூங்கச் செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் என்னைத் தாலாட்டித் தூங்கச் செய்.

நெடுங்காலமாக வேண்டி இறுதியாக என் கோயிலுக்குள் நீ வந்துள்ளாய். என் புலன்களின் கதவுகள் அகலமாகத் திறந்திருக்கின்றன. இருட்பறவை தன் சிறகுகள் விரித்துப் பறந்துசென்றுவிட்டது. பழமையான என் காதல்கவிதையைப் புதிதாகப் பாடியிசைக்க நான் என் இதய யாழ்-தந்திகளை இயைத்துக் கொண்டுள்ளேன். என் ஆன்மாவிலிருந்து மலரும் புதிய ஸ்வரங்களைக் கொண்டு நான் உனக்குப் புதிய பொலிவுடன் துலங்கும் ஒரு கானத்தைப் பாடுவேன்.

என் கானத்தின் ஒலியலைகள் உன் பிரபஞ்ச-தாளக் கடல்மீது நடனம் புரியும்.  அப்படியே, என்னை பக்திப் பேரலைகளால் மிதக்கவைத்து உன் கரைக்கு அழைத்துச்செல்.

கான-அலைகளின் தாலாட்டே, உயிரினும் பிரியமான என் நிரந்தரத் தாயின் தாலாட்டை எனக்காகப் பாடு.

கடவுளன்பின் கந்தர்வ கானமே, என்னை உன் இனிய ராகத் தொட்டிலிலிட்டு ஆட்டி, கடவுளின் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் தூங்கச் செய்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
198 Rock me to sleep on Thy Bosom of Peace.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 14 டிசம்பர், 2021

197. எங்கள் கூட்டுப் பிரார்த்தனைகளை பலப்படுத்து.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எங்கள் கூட்டுப் பிரார்த்தனைகளை பலப்படுத்து.

எங்கள் நெஞ்சிலிருந்து ஒருமித்துப் பொங்கும் எங்கள் பிரார்த்தனை நீரோடைகள் எல்லாம் ஒன்றாக இணைந்து பெருவேகத்துடன் பாய்கிறது. இந்த அகலமான, ஆழமான பிரார்த்தனை நதிகள் அனைத்தும் உன் சன்னிதானமெனும் கடலைத் தேடி அதிவேகமாக ஓடுகின்றன. எங்கள் வெள்ளம், அலட்சியமெனும் தடைகள், மயக்குறு மனிதப் பழக்கவழக்கங்கள், லோகாயத-விகல்பங்கள் என இவையாவற்றையும் தகர்த்துக் கொண்டு பாய்கின்றது. எங்கள் வெள்ளம் சோதனைகளாலும் வாழ்க்கை அனுபவங்களாலுமான பரந்த பிரதேசத்தில், மனித அறியாமையெனும் மணல்களின் வழியாக ஓடிச் சென்று கொண்டிருக்கின்றது. ஆயினும், உன் கடற்கரை வெகு தொலைவில் இருப்பதுபோல் தோன்றுகின்றது,  தாகத்துடன் கூடிய  எங்கள் வெள்ளம் உன் பிரகாசமான பெரும்பரப்பைத் தேடி பரபரப்பாக ஆனால் உறுதியாக சென்று கொண்டுள்ளது.

உன் கருணை மழையை இடைவிடாமல் அடைமழையாய்ப் பொழி. எங்கள் பிரார்த்தனை வெள்ளங்களை பலப்படுத்தி, எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உன் கரைக்கு அவைகளை விரைந்துசெலுத்தி ஜெயமடையச் செய்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
197 Mayest Thou reinforce our blended prayers.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

196. உன் மேலுள்ள அன்பினால் என்னுள்ளிருந்து ஊறும் புனிதமான கண்ணீரில், ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் மேலுள்ள அன்பினால் என்னுள்ளிருந்து ஊறும் புனிதமான கண்ணீரில், ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன்.

நீளமான, துரதிருஷ்டமெனும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளின் வழியாக, நெடுங்காலப் பிரிவெனும் மனோராஜ்ஜிய இடைவெளிகளைத் தாண்டி, முடிவற்ற ஜென்மங்களெனும் பந்தயத் தொடர் பாதைகளில் ஓடி, பல லட்சியங்களெனும் படிக்கட்டுக்களைக் கடந்து, பல்வேறு ஆசைகளெனும் வழிகளைப் பின்தொடர்ந்து, சோகமும் இன்பமும் மாறிமாறி வரும் சுழல்பாதைகளிலிருந்து விடுபட்டு - இறுதியில் நான் என் பயணத்தின் முடிவில் நிற்கின்றேன். நான் என் கடந்த அனுபவங்களை இனிமையாக நினைவுகூர்கின்றேன்; ஒவ்வொரு கடந்த காலத்துத் துன்பமும், இப்போது ஒரு இனிமையான ஆனந்தக் கண்ணீரூற்றைத் திறந்துவிடுகின்றது. உன் மேலுள்ள அன்பினால் பரிமளிக்கும் அந்தப் புனிதமான கண்ணீரில், நான் தினமும் ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
196 I baptize myself in the sacred waters of my tears of love for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 11 டிசம்பர், 2021

188. என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன.

உன் வருகையால் என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன. கடவுளே, நீ வந்தபோது எல்லாமே ஜீவகளையுடன் பிரகாசித்தன. கோயிலில் நான் நின்றிருந்த இடத்தில் பளிங்குத்தளம், உன் சாந்நித்தியதால் எனக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. உன் தொடுகையால் ஜடப்பொருட்கள் உணர்வுப் புனருத்தாரணம் பெற்று, எல்லாப்புறங்களிலுமிருந்து அவை பேசின. உன் ஆனந்த நறுமணத்தைச்  சுமந்து, நிஸ்சலமெனும் சுகந்தமான காற்று எல்லாப்பக்கங்களிலும் தவழ்ந்து பரவியது. 

உடைந்துபோன அமைதிப்பாறைகளின் அடியில் மறைந்திருக்கும் உன் சரணாலயத்தைக் கண்டுகொண்டேன்.

புனிதமெனும் தூய பலிபீடத்தின் மேல் உன் ஆனந்தப் பேரூற்று துள்ளிக் குதிக்கின்றது.

ஏந்திய என் உள்ளங்கைகளில், உன் ஆறுதலெனும் உயிரூற்று நீரை வாங்கி அருந்துகின்றேன். இனி எனக்கு தாகமென்பதே கிடையாது என்பதை நான் அறிகின்றேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
188 Many doors opened before me.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 9 டிசம்பர், 2021

187. உனது மதுரத்தை அருந்துமாறு உன் ரீங்காரப்பட்சிக்கு அருள்புரி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உனது மதுரத்தை அருந்துமாறு உன் ரீங்காரப்பட்சிக்கு அருள்புரி.

என் கனவுகளினாலான தோட்டத்தைத் தேடி, உன் நாமத்தை ரீங்காரித்து, இடையறாமல் எண்ணிலடங்கா மைல்கள் தூரம் நான் பறந்துசென்றேன்.

நான் உன் சின்னஞ்சிறு ரீங்காரப்பட்சி; ஆயினும், என் செயலாக்க இறகுகளை எப்போதும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். ஏனெனில், உயர்ந்தோங்கிய மலையுச்சி நிகர் கனவுகளில் வண்ணமயமாகப் பூத்துக்குலுங்கும் உன் அரிய பூந்தோட்ட மலர்களைத் தேடி நான் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. 

நான் உன் நாமத்தை ரீங்காரிக்கும் ஒரு ரீங்காரப்பட்சி, அதன் உணர்வெனும் நீண்ட அலகுகளைப் பொன்மய, நீலவண்ண, செந்நிற, மற்றும் பலவண்ண மலர்-குணங்களின் நெஞ்சில் ஆழ்த்தி சுவைக்கின்றது. தீயனவற்றின் கடுக்கும் தேனை சுவைப்பதிலிருந்து என்னை உன் அருள் காக்கட்டும். 

உன் சோர்வடையா அபரிமித சக்தியினால் நான் துறுதுறுவென்று ரீங்காரித்து, உன் புகழ்மகிமையாலான தொங்கும் தோட்டங்களிலும், பணிவான மனித இனிமை மேவும் பாதையோரகளிலும் வளரும் அன்பினால்-தோய்ந்த மலர்களிலிருந்து மதுரத்தை அருந்தும் நான் உன் சின்னஞ்சிறு ரீங்காரப்பட்சி.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
187 Bless Thy Humming Bird to drink of Thy honey.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 7 டிசம்பர், 2021

186. நான் உனது தூய்மையான சொர்க்கலோகப் பறவையாக வேண்டுகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் உனது தூய்மையான சொர்க்கலோகப் பறவையாக வேண்டுகின்றேன்.

பரந்து விரியத்தக்கப் பொன்மய இறக்கைகளையும், மிருதுவான கோமள சிறகுகளையும் கொண்டு வர்ணப் பொலிவுடன் அழகிய ரூபத்தில் உன்னால் சிருஷ்டிக்கப்பட்ட சொர்க்கலோகப் பறவை நான்.

முன்னேற்றத்திற்காகத் தணியாத ஆசைகொண்ட என் இறக்கைகளை வீசி, சாந்தி சொர்க்கத்தை நாடி, இறுக்கமான வாழ்க்கை வானத்தில் நான் இடையறாமல் சிறகடித்துப் பறந்துள்ளேன். 

கலக்கமெனும் இருள் பலமுறை என் பிரகாசமான மனத்தின் இலகுவான இறகுகளை மூடி, அவற்றின் ஒளியை மங்கச் செய்துள்ளன.

கடவுளே, மாசடைந்த உன் சொர்க்கலோகப் பறவையை உள்காட்சியெனும் தூய்மைப்படுத்தும் சூரிய-ஒளிக் கதிர்களாலும், இனிமையாக சலசலக்கும் சாந்தி நீரோடையிலும் நீ நீராட்டு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
186 I want to be Thy cleansed Bird of Paradise.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 6 டிசம்பர், 2021

177. உன் பரந்த சன்னிதானத்தில் சங்கமிக்க நான் விரும்புகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் பரந்த சன்னிதானத்தில் சங்கமிக்க நான் விரும்புகின்றேன்.

அன்பின் ஊற்றே, உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் எங்கள் நெஞ்சங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதை நாங்கள் உணருமாறு செய். எங்கள் ஆசைநதிகள் எல்லாவற்றிற்கும் ஆதிமூலமே, எங்களை அற்பமான புலனின்ப மண்ணில் பாய்ந்து, வறண்டு ஆவியாகிப்போகாமல் இருக்க எங்களுக்குக் கற்பி. 

எங்கள் ஆசைநதிகள் பணிவு, சுயநலத் தியாகம், பிறர்நலம் பேணுதல் எனும் எல்லா தாழ்வான நிலங்களின் வழியேயும் பாய்ந்து, இறுதியில், உன் அருட்கொடை மழையினால் மேலும் பெருகி, அனைத்தையும் பூரணதிருப்தியாக்கும் உன் கடலில் சங்கமிக்க நாங்கள் உரிமையுடன்-வேண்டுகின்றோம்.

எங்கள் அனுதாபம், அன்பு, பாசமெனும் கிளைநதிகள், வறண்ட சுயநலமெனும் பூமியில் வழியே பாய்ந்து அருகிப் போகாமலிருக்க எங்களுக்கு அருள்.

உன்னிடமிருந்து தோன்றிய எங்கள் அன்பின் தனித்தனியே பிரிந்து ஓடும் சிற்றோடைகள் எல்லாம், இறுதியில் அனைத்தையும் பூரணதிருப்தியாக்கும் உன் கடலில் சங்கமிக்கட்டும்.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
177 I want to merge in the vastness of Thy Presence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
Compare with:
71 Flood me with Thine Omnipresent Love.
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

176. நாங்கள் உன் உதவிக்காகக் கதறும் தீக்கிரையான உன் குழந்தைகள்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நாங்கள் உன் உதவிக்காகக் கதறும் தீக்கிரையான உன் குழந்தைகள்.

தவறான சுகங்களின் மயக்கும் தீ, அதனுடன் விளையாட உன் குழந்தைகளைக் கவர்ந்தது. அந்த நாசமேற்படுத்தும் ஜ்வாலைகளின் கறுக்கி, வடுப்படுத்தும் விளைவுகளைக் குறித்து உன் அமைதியான குரல் அவர்களை எச்சரித்தது. ஆனால் அவர்கள் உத்வேகத்துடன் அந்த அற்ப சுகத்தின் கனல்களை முனைந்து பற்றிக் கொள்ள விழைந்தனர். விழுங்கும் தழலின்கண் பலர் அவர்களின் பேராசைக் கைகளை அழுத்திக் கோரமாக அடிபட்டுக் கொண்டனர். பின், அவர்களின் அதிருப்திக் காயங்களும், சிற்றின்ப திகட்டல்களும், உன் உதவியை நாடி, உனக்காக அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தன.

பெரும் பொறுமையுடைய மருத்துவரே! என்றும்-தவறாமல் குணமாக்கும் உன் மன்னிப்பும் அன்பும் கலந்த மருந்துக் களிம்பை வைத்துக் கொண்டு நீ  அருகிலேயே நிற்கின்றாய். உன் எச்சரிக்கும் குரலை நாங்கள் கேட்கக் கற்றுக் கொடு; அதன்மூலம், நாங்கள் தேவையற்ற வேதனையால் துடித்து, அனாதரவாய்க் கதறாமல், மாறாக உன்னை நோக்கி இனிய பாட்டுக்களாய்ப் பாடுவோம்.

நாங்கள் உன் சொல் கேளா குழந்தைகள், இவ்வுலகின் தீய கேளிக்கைகள் எங்களைச் சுண்டி இழுக்கிறது. அவற்றின் இழுவைக்கு ஆட்படாமல், தெய்வீகமான உன் பேருணர்வு ஜோதியுடன் மட்டுமே இனி நாங்கள் விளையாட எங்களுக்குக் கற்றுக் கொடு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
176 We are Thy burned children, wailing for Thy help.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

175. என்னுள் உன் வரம்பற்ற நடனத்தை ஆடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னுள் உன் வரம்பற்ற நடனத்தை ஆடு.

தெய்வத்தாயே, உனக்கு நாச நாட்டியம் (நாஸ்யம்) ஆடுவதில் பிரியம். 

பலவீனமான அழியும் (உடற்) சுடர்களை உன் நாசமேற்படுத்தும் போர்-நடனத்தில் சிதைவிக்கின்றாய், அதன்மூலம், எங்கள் ஆன்மாக்கள் சிதையாமல் பத்திரமாக இருப்பதை நீ புன்னகையுடன் காட்டுவதற்காக.

உன் கருணையினால், நீ எங்களைச் சுற்றி மூடியிருக்கும் கடினமான மாயமோகங்களின் களிம்புப் படலத்தைத் தேய்த்து அகற்றுகின்றாய்.

தெய்வத்தாயே, நீ அழிவு நடனத்தை விரும்புவதினால், நான் என் ஆசைகள், குறைகள், பலவீனங்கள், குறுகிய குணங்கள் ஆகிய அனைத்திற்கும் அவை என்றும் திரும்பாவண்ணம் ஒரேயடியாய்க் கொள்ளிவைத்துவிட்டு, தீயனவற்றை ஒழிக்கும் உன் நாட்டியத்தில் இணைந்து ஆடுகின்றேன்.

தெய்வத்தாயே, இப்போது என் குறுகிய தன்மை விட்டொழிந்ததால், நீ அழிக்க வேண்டுவது என்னுள் எதுவும் மீதமில்லை, ஆகையால் உன் அழிவு நடனத்திற்குப் பதிலாக என்னுள் உன் வரம்பற்ற அன்பு நடனத்தை ஆடு.    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
175 Dance in me Thy dance of Infinity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 2 டிசம்பர், 2021

174. என் ஆன்மப் பெட்டகத்துள்ளே என் புனிதப் பேரார்வங்களைப் பூட்டி வைத்துள்ளேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் ஆன்மப் பெட்டகத்துள்ளே என் புனிதப் பேரார்வங்களைப் பூட்டி வைத்துள்ளேன்.

உன் வரம்பற்ற பார்வையின் கைத் தொட்டிலில் என் குறுகிய தன்மை துயில் கொண்டிருந்தது. மிருதுவான உன் சாந்தமெனும் பாதத்தின் காலடியோசையைக் கேட்டு, சத்தம்செய்யும் சிற்றின்பங்களின் இரைச்சல் தணிந்துள்ளது.

நான் விழித்துக்கொண்டு காத்திருந்தேன். 

அமைதியின் அரசே, சிமிழ்க்கையுடனான  குதூகலங்கள், ஆன்ம-கானங்கள், மந்திர ஜபங்கள் உன்னை வரவேற்க எழுச்சியுடன் உன் சாந்தம்-பொதிந்த அரியணையை நோக்கிச் செல்கின்றன.

இருளினாலே மறைக்கப்பட்ட சிதைந்த கனவுகளின் வைரத்துகள்கள், உன் மின்னொளி வீசும் வரவினால் மங்கி மினுமினுத்தன. 

நான் என் ஞாபகப் பெட்டகத்துள் பூட்டி வைத்திருந்த என் அனைத்துப் புனிதப் பேரார்வங்களையும், எனக்குமுனக்கும் இடையேயுள்ள விலைமதிப்பற்ற ஒப்பந்தங்களையும் வெளியே எடுத்து, அவற்றை அன்பின் ஒப்பற்ற மதிப்புடைய செம்பொன்னாகப் பண்டமாற்று செய்தேன். அவற்றைக் கொண்டு நான் உனக்கு எப்போதும் நிலைத்திருக்கும் ஒரு ரகசிய கோயிலை என் ஆன்மாவிற்குள் எழுப்புவேன், அங்கு உன் சாந்த அரியணை அமைந்திருக்கும். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
174 I locked my sacred aspirations in my soul-vault.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!