ஞாயிறு, 19 டிசம்பர், 2021

209. நீ உன் பேசும் மௌனத்தின் குளிர்மதிக் கிரணங்களைக் காண்பித்தாய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நீ உன் பேசும் மௌனத்தின் குளிர்மதிக் கிரணங்களைக் காண்பித்தாய்.

தெய்வத்தாயே, ரோஜாப்பூவின் பேசும் மணத்தில் உன் குரலைக் கேட்டேன். என் பக்தியின் சன்னமாக முணுமுணுக்கும் பிரார்த்தனைகளில் உன் குரலைக் கேட்டேன். என் ஆரவாரிக்கும் எண்ணங்கள்போடும் இரைச்சல்களின் அடியிலும் உன் குரலைக் கேட்டேன்.  உன் அன்பே தான், நட்பின் குரல் மூலமாகப் பேசியது. உன் மிருதுவான தன்மையை நான் அல்லிமலர்களின் மென்மையில் தொட்டுணர்ந்தேன். 

தெய்வத்தாயே, விடியலைப் பிளந்து, எனக்கு உன் ஒளிமுகத்தைக் காட்டு! பகலவனைப் பிளந்து, உன் சக்திமுகத்தைக் காட்டு! இரவினைப் பிளந்து, எனக்கு உன் சந்திரவதனத்தைக் காட்டு! என் எண்ணங்களைப் பிளந்து, உன் ஞானமுகத்தைக் காட்டு! என் உணர்வுகளைப் பிளந்து, உன் அன்புமுகத்தைக் காட்டு! என் மானத்தைப் பிளந்து, உன் பணிவுமுகத்தைக் காட்டு! என் ஞானத்தைப் பிளந்து, உன் பூர்ணமுகத்தைக் காட்டு!

நான் தனிமையின் திக்கற்ற தவிப்பில் உன்னை வேண்டி ஓலமிட்டபோது, அருணோதயத்தில் நீ வெளிப்பட்டு, ஆனந்தத்தால் என்னை வாழ்த்தி வரவேற்றாய். குழம்பாய்க் கொதிக்கும் கதிரவனின் கதவுகளின் வழியே  நீ தோன்றி, என் உயிரின் துவாரங்கள் வழியே உன் ஆற்றலை ஊட்டுவித்தாய்.  என் அறியாமை இரவினை நீ கிழித்துக்கொண்டு, உன் பேசும் மௌனத்தின் குளிர்மதிக் கிரணங்களைக் காண்பித்தாய். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
209 Thou didst reveal Thy silver rays of speaking Silence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: