வெள்ளி, 30 ஜூலை, 2021

29. முகம்மது நபியாக என்னிடம் வருவாயாக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

முகம்மது நபியாக என்னிடம் வருவாயாக.

முகம்மது நபியே, சுடரும் கடவுளின் மைந்தனே! பிரகாசமாக ஒளிரும் உங்கள் தெய்வீக வீரமுழக்கத்தினால் பலர் தங்கள் போராடும் உள்ளங்களுக்குச் செயலில் நிதானமான சாந்தத்தைக் கண்டுகொண்டு, இருளெனும் கடுங்கோலனிடமிருந்து ஞானக் கன்னியை மீட்கப் பேராவல் கொண்டுள்ளனர்.

வலுவான அமைதிக்கும் கோழைத்தனமான காம-சுகத்திற்கும் நடுவே நடக்கும் போரில் தெய்வீகப் போராளியைத் தவிர மற்றோர் எவரும் வெல்லமுடியாது. உன் போர்வீரர்கள் அவர்களுடைய பிரகாசமான நன்மைதரும் ஈட்டிகளை தீயவைகளின் நஞ்சு-நெஞ்சங்களில் துளைத்து அவைகளின் உயிரைப் பறித்தனர்.

முகம்மது நபியே, ஆன்ம-சாரமற்ற விக்ரஹ-அடையாளங்களைக் கண்டனம் செய்பவரே, உருச்சிதைக்கும் அடையாளங்களும் ரூபங்களும் முற்றிலும் இல்லாத சுத்தமான, ஒன்றேயான உருவமற்ற கடவுளை வழிபட நீங்கள் எங்களுக்கு கற்பித்தீர்கள்.

முகம்மது நபியே, உங்களைச் சார்ந்திருப்பவர்கள் உலகாயத புலனின்பங்களின் வறண்ட பூமிக்கு தவறிச் சென்றுவிடாமல், பெரும்விளைச்சல் கொடுக்கும் அழிவற்ற மனத்தை நாடுமாறு அவர்களை எச்சரித்தீர்கள்.

புலன்களை மயக்கும், எண்ணங்களைத் தகர்க்கும், கடவுளை விலக்கும் மதுபானங்களுக்கும், போதைப்பொருட்களுக்கும் நீங்கள் பரம வைரி என்பதை உங்கள் வழிநடப்பவர்கள் அறிவார்கள். உண்மையான, சீரான நமாஸ் பிரார்த்தனையெனும் மதுபிழியும் எந்திரத்தினால் வடிக்கப்பட்ட மெய்யான மதுரசத்தின் மேலுள்ள ஏக்கமே, தவறுதலாக மதுபானத்தின் மேல் கொள்ளும் ஆசையாகப் பரிமளிக்கின்றது என்பதனை நீங்கள் கற்பித்தீர்கள்.   

முகம்மது நபியே, உங்கள் திருக்குர்ஆன் எனும் ஒளிவிளக்கு வழிதவறிய  பல ஜீவாத்மக் கப்பல்களை, மறைவாய் அமிழ்ந்திருக்கும் பாவமெனும் பாறைகளினின்று காத்துப் பாதுகாப்பாகக் கடவுளின் கரைக்கு வழிநடத்திக் கொண்டிருக்கின்றது.

அவ்வப்போது உண்ணா நோன்பினைக் கடைபிடிப்பதன் மூலமும், ஸ்தூல உணவினைச் சார்ந்திருப்பதை விடுவதன் மூலமும், பேருணர்வைப்   பக்குவப்படுத்தப்பட்ட பீடத்திற்குக் கீழிறங்கி வர ஏதுவாகி, அது அழியா அமிர்த உள்ளங்களை நுகருமாறுத் திறவாக நீங்கள் கற்பித்தீர்கள்.

முகம்மது நபியே, எல்லாம் வல்ல இறைவனின் நாமமான அல்லா-ஹூ-அக்பர் எனும் போர் முரசினால் உலகாயதப் பிடிப்பெனும் சாத்தானை விரட்டியடித்தீர்கள்.

உங்கள் ஆன்மபலம் பொதிந்த போர்-முழக்கங்கள் எங்கள் இதயங்களைச்  சூறையாடும் பலவீனங்கள், குறுகிய எண்ணங்களின் இறுக்கப்பிடிகளிலிருந்து விடுபடச் செய்யட்டும்.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
29 Come to me as Mohammed.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 22 ஜூலை, 2021

39. கடவுட்-போதையால் தோய்ந்த கண்களில் ஊறும் மதுபானத்தைச் செல்வந்தர்கள் வீட்டில் பரிமாற விரும்புகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கடவுட்-போதையால் தோய்ந்த கண்களில் ஊறும் மதுபானத்தைச் செல்வந்தர்கள் வீட்டில் பரிமாற விரும்புகின்றேன்.

உன் கோயில்களில், பலர் வழிபட வருகையில், நான் அவர்களின் கண்களிலிருந்து கடவுட்-போதையை சேகரிப்பேன். அவற்றைச் சேர்ந்து கலந்து பக்தி-மதுபானமாய் ஆக்குவேன். அதை என் தாகத்தால் தவிக்கும் எண்ணங்களுக்கு ஊற்றிக்கொடுப்பேன்; அவை அதனை மென்மேலும் குடித்து, அவைகளுடைய மேலோங்கி நிற்கும் காயங்களையும் கவலைகளையும் மறந்துபோகும்.

அருட்செல்வம் குன்றிய பணக்காரச் செல்வந்தர்கள் வீட்டில், அந்த மாய மதுபானத்தை என் நல்லெண்ணத்துடனான நேர்மை ஜாடிகளினால் ஊற்றிப் பரிமாற விரும்புகின்றேன்.

எவரெல்லாம் அந்த மதுபானத்தைப் பருகுகின்றனரோ, அவர்களின் போதை மிகுந்து முற்றி, தங்கள் சுயரூப அறியாமையின் துன்பத்தை அன்றிலிருந்து அடியோடு மறக்கவேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva


Original: 
39 May I serve the cocktail of God-Intoxicated Eyes in the home of the rich.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 21 ஜூலை, 2021

2. உன் குழந்தைகளாய் உரிமையுடன் கேட்போம்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் குழந்தைகளாய் உரிமையுடன் கேட்போம்.

நீ எங்கள் தந்தை. நாங்கள் உந்தன் பிரதிபிம்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளோம். நாங்கள் கடவுளின் குழந்தைகள். நாங்கள்  பிச்சைக்காரர்களைப் போலே கேட்கவோ, பிரார்த்திக்கவோ மாட்டோம், மாறாக உன் வாரிசுகளாய் ஞானம், முக்தி, ஆரோக்கியம், இடையறாத இன்பம் ஆகியவற்றை உரிமையுடன் கேட்போம். குறும்புக்காரர்களோ நல்லவர்களோ எப்படியானாலும் நாங்கள் உன் குழந்தைகள். உன் விருப்பத்தை எங்களுக்குள்ளே கண்டுகொள்ளுமாறு உதவு. நீ எங்களிஷ்டம் போல் உபயோகிக்குமாறு கொடுத்த மனித இச்சையை நாங்கள் சுதந்திரமாக,  ஞானத்தின்-வழிநடக்கும் உன் இச்சையுடன் இயைந்து, உபயோகிக்க எங்களுக்குக் கற்றுக்கொடு.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
2 We demand as Thy Children.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 19 ஜூலை, 2021

75. நான் உன் அதீத-உணர்வின் பிராணசக்திப் பிரபஞ்சத்திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதை நான் அறியுமாறு செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் உன் அதீத-உணர்வின் பிராணசக்திப் பிரபஞ்சத்திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதை நான் அறியுமாறு செய்.

பிடிபடாத இந்த உலக ஒலி-ஒளிக் காட்சிகளைக் காண்கையில், தினமும் மாறிக்கொண்டே சுற்றிச்சுழன்று விறுவிறுப்பாக நடம்புரியும் ஜீவராசிகளின் வாழ்க்கை நாடகம், ஒரு மகத்தான கனவுத் திரைப்படக்காட்சியைத் தவிர வேறெதுவுமில்லை என்ற எண்ணம் ஏற்படுவது உறுதி.

உலகில் காணும் சோகங்கள், நகைப்புகள், வாழ்வின் முரண்பாடுகள், பிறப்பு-இறப்பெனும் கனவுகள், மாறிக்கொண்டே இருப்பவைகளின் தகவல் துணுக்குகள் என இவையாவும் நம் எல்லாப் புலன்களையும், எண்ணங்களையும் மோகப்படுத்துவதற்கும், பொழுது போக்குவதற்குமான    பேசும்படங்களைத் தவிர வேறெதுவுமில்லை.

பேரியக்குனரான இறைவனே, எங்களை மகிழ்விக்கவும், பொழுதுபோக்கிற்காகவும், உன் பிரபஞ்ச-அதிர்வலைகளைக் கொண்டு,  எல்லாப் புலன்களினால் வழியேயும் அறியுமாறு, பேசும் பிரபஞ்சத் திரைப்படங்களைப் புதுப்புதிதாக, முடிவில்லாமல் தொடர்ந்து அனுதினமும் காட்டிக்கொண்டே இருக்கின்றாய்.

மாய இயக்குனரே, உன் பிரபஞ்சப்படங்களை நாங்கள் பார்க்கவும், கேட்கவும்  முடிவதோடு மட்டுமின்றி அவைகளைத் தொட்டு உணரவும் முடிகின்றன. உன்னுடைய கட்புலனாகின்ற, தொட்டுணரப்படுகின்ற, இரைச்சலிடுகின்ற, போலியாக வாழும் சப்த-நிழல்கள் தினசரி எங்கள் உணர்வுத்தளத் திரையில் காண்பிக்கப்படுகின்றன.

உன் அருட்கொடையால், நான் உன் சினிமா கொட்டகையில் துயரமும், நகைச்சுவையும் இரண்டும் கலந்த பகுதிகளை நடிக்கத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன். என் சோகமான பகுதிகளையும், மகிழ்வான பகுதிகளையும் நான் முறையாக நடிப்பதே நன்று. ஆனால், இறைத்தந்தையே, எனக்கு அவ்வப்போது என் வேலைகளிலிருந்து சில நாட்கள் ஓய்வு கொடு. அதன்மூலம், நான் என் அகவிசாரணையின் மேல்மாடத்திற்குச் சென்று, என் எண்ண-அவையோர்களுடன் கூடி, புன்னகைக்கும் இதயத்தினால் என்னுடைய  சுய துயரக்காட்சிகளையும், நகைச்சுவைக்காட்சிகளையும் காண்பிக்கப்படுவதைக் கண்டுகளிக்க முடியும். 

என்னுடைய சொந்த வாழ்வின் துயரக்காட்சிகளை ஒரு விறுவிறுப்பான ஆர்வத்துடன் பார்க்க எனக்குக் கற்பி. அதன்மூலம், ஒவ்வொரு பெருந் துயரமான படத்தைப் பார்த்து முடித்ததும், "ஆ! அது விறுவிறுப்பும் ஜீவக்களையும் நிறைந்த ஒரு சிறந்த படம். அப்படத்தைப் பார்த்ததில் எனக்குத் திருப்தி, ஏனெனில், நான் அதிலிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்!" என நான் வியந்துரைப்பேன். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
75 Make me see that I am just acting in Thy super-sense vitaphone cosmic pictures.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 14 ஜூலை, 2021

7. பிரபஞ்ச மூர்த்தியினை வழிபடுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிரபஞ்ச மூர்த்தியினை வழிபடுதல்.

எல்லையற்ற பேருணர்வே, உன்னை எல்லைக்குட்படுத்தி நான் இன்று பூஜிப்பேன். பிரபஞ்ச அமைதியே, உன்னுடைய முன்கேளாத குரலை ஓடைநீர் சலசலப்பிலும், குயில்களின் பாட்டோசையிலும், முழங்கும் சங்கொலியிலும், சமுத்திரத்தின் அலைத் தாளத்திலும், அதிர்வலைகளின் ரீங்காரத்திலும் நான் கேட்பேன்.

என் எல்லைக்குட்பட்ட மூர்த்தியே, பிரபஞ்சம் மேவும் என் மனக்கோயிலில், இந்திய-சம்பிரதாயப்படி, நான் உன்னைச் சடங்குகளுடன் பூஜை செய்வேன். சூரியனின் ஜீவசக்தியுடன் ஒளிரும் செம்மையான உன் முகத்தை நான் பணிவுடன் காண்பேன். உன் குளிர்ந்த நிலவொளிக் கடைக்கண் பார்வையினால் என் சோகம் முற்றிலும் விலகும். 

உன்னைக் காணமுடியாதவரென்று இனி நான் கூற முடியாது, ஏனெனில் என் பூஜையில் நான் உன் ரகசிய இதயத்தை, உன் எல்லையற்ற, நட்சத்திரக் கண்களின் வழியே நேரே காண்பேன். காற்றில் மேலெழும்பும் உன் சுவாசத்தினுடன் காணிக்கையாகப் பெற்ற எனது சுவாசத்தைக் கலப்பேன். உனக்காக ஏங்கும் என் சொல்லற்ற மந்திரங்கள் என் இதயத்துடிப்பின் தாளத்திற்கேற்பக் கவிபாடும். உன் இதயத்தை எல்லா இதயங்களிலும் துடிப்பதை உணர்வேன். உன் உழைக்கும் கரங்களை புவியீர்ப்பு விசையிலும், இதர பிரபஞ்ச சக்திகளிலும் காண்பேன். உன் காலடியோசையை எல்லா ஜீவராசிகளின் காலடியோசையிலும் கேட்பேன்.

என் வழிபாட்டில், கருமையால் சூழப்பட்டு மின்மினுக்கும் இரவுத் திரையிலும், மங்கலான வெளிச்சம் காட்டும் விடியலிலும், சாம்பல்நிற அந்திசாயும் வேளையிலும் உன் பரந்துவிரிந்த விண்ணுடலைக் காண்பேன். பால்வெளி கேலக்சியின் நட்சத்திர மணிகளால் கோர்க்கப்பட்ட மாலையையும், வானவில்லாலான கிரீடத்தையும், ஒளிவீசும் கோளங்களாலான வைரங்களையும் அணிந்துள்ள என் பிரபஞ்ச மூர்த்தியே, உன்னை என் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.

வான்வெளியின் துவாரங்கள் வழியே உன் வாழ்க்கையின் வியர்வை சிந்துகின்றது; நதிகள், நீரோடைகள், கிளைநதிகளெனும் நாளங்கள் வழியேயும், மனிதர்களின் ரத்த அணுக்களின் மூலமாகவும் உன் ரத்தம் பாய்கின்றது; உன்னை இனி நான் கட்புலனாகாதவராக வழிபடாமல், என் கண்ணுக்குப் புலனாகும் பிரபஞ்ச உருக்கொண்ட மூர்த்தியாக வழிபடுவேன்.

என் ஆன்மாவின் கட்புலனாகும் மூர்த்தியே, இயற்கையின் ஒத்திசையில் ஒலிக்கும் கோயில்-மணிகள், கடலின் உருமலில் இசைக்கும் மேள தாளங்கள், பல்வித மெழுகுவர்த்தியாய் ஒளிரும் மனங்கள், எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் ஓதப்படும் மந்திரங்கள், ஜீவாத்மாக்களின் தோட்டங்களில் பூக்கும் பக்தி-மலர்கள், நேசங்களின் சுகந்தம் - இவையாவும் உன் வழிப்பாட்டுக்கு உபசாரமாக என்னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

மனக்கண்ணுடன் சேர்ந்து திறந்த இரு கண்களுடனும், என் இயற்கை-மூர்த்தியான வாழும் கடவுளான உன்னை நான் கண்டுகளித்து, மந்திரங்களை வாக்காலும், மனத்தாலும் ஜபித்து, பக்தியும், செயலும், ஞானமும் ஒருங்கிணைந்த பூங்கொத்துடன், அன்பின் மொழியினாலும், இதயத்தின் சல்லாப முணுமுணுப்பாலும், தியானத்தின் கண்ணீரற்ற கண்ணீராலும், பிரக்ஞானத்தின் அமைதியான மூச்சிரைப்பாலும் உன்னை வழிபடுவேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
7 Worshipping the Cosmic Idol.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 7 ஜூலை, 2021

8. ஸத்குரு வணக்கம் (சமஸ்கிருத சுலோகம்).

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஸத்குரு வணக்கம் (சமஸ்கிருத சுலோகம்).

பிரம்மானந்தத்தை சுயரூபமாக உடையவர், பரமசுகத்தை அருளுபவர், ஞானமூர்த்தி; இருமை குணங்களுக்கு அப்பாற்பட்டவர்; பரந்த ஆகாயவெளி நிகர் கட்டற்றவர்; அறியவேண்டுவன எல்லாம் அறிந்தவர்; நித்தியமான, தூய்மையான ஒன்றேயானவர்; எல்லா நிகழ்வுகளுக்கும் சாட்சி; எல்லா கற்பனை எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர்; சத்வ, ராஜஸ, தாமச குணங்களால் களங்கப்படாதவர்; என்றும் விழிப்புணர்வுடன் இருக்கும் என் குருவே - உன்னை நான் தலை வணங்குகின்றேன்.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
8 Salutations to the Great Preceptor (Sanskrit Scriptures).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 6 ஜூலை, 2021

17. கவன ஒருமுகப் பயிற்சிக்கு முன்செய்யும் பிரார்த்தனை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கவன ஒருமுகப் பயிற்சிக்கு முன்செய்யும் பிரார்த்தனை.

பேருணர்வே, தியானத்தினால் என் மனவெளியெனும் ஏரியில் சீற்றத்துடன் வீசும் சுவாசத்தின் சூறாவளியையும், மனச் சஞ்சலத்தையும், புலன்களின் குறுக்கீடுகளையும் தடுத்து நிறுத்த எனக்குக் கற்பி. என் பிரக்ஞையெனும் மந்திரக்கோல் தாபத்தின் வேகத்தையும், பிரயோஜனமற்ற ஆசைகளையும்  தடுத்து நிறுத்தட்டும். என் சலனமற்ற மனவெளி ஏரியில் உன் சாந்நித்தியத்தின் ஒளிதுலங்கும் என் ஆன்மச் சந்திரனின் தத்துரூபமான பிம்பத்தை நான் காண்பேனாக. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
17 Prayer before practicing concentration.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 5 ஜூலை, 2021

16. உடல்-பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கான பிரார்த்தனை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உடல்-பேட்டரியை ரீசார்ஜ் செய்வதற்கான பிரார்த்தனை.

சின்மயப் பிரபஞ்ச சக்தியே, நீ தான் என் உடலை நேரடியாகப் பேணுகின்றாய். திடமான, திரவ, வளிமய உணவு வகைகள் உன் பிரபஞ்ச சக்தியினால் உருமாற்றப்பட்டு, முழுமையான ஆன்மசக்தியாக பரிமளிக்கப்பட்டு என் உடலைப் பராமரிக்கின்றன. பேருணர்வே, நான் உணவைச் சார்ந்து வாழ்வதை படிப்படியாகக் குறைத்துக் கொண்டு, நேரடியான பிரபஞ்ச சக்தியினைச் சார்ந்து வாழ்வதை மென்மேலும் அதிகப்படுத்தக் கற்றுக்கொள்ள எனக்கு உதவு. உன் சக்தி புலன்களின் பல்பு விளக்குகளில் ஒளியேற்றுகின்றது. நான் உன் சர்வ வியாபக பிரபஞ்ச சக்தியினால் என்னை ரீசார்ஜ் செய்து கொள்கின்றேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
16 Prayer-Demand for recharging of body-battery.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 4 ஜூலை, 2021

15. உணவருந்துமுன் செய்யும் பிரார்த்தனை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உணவருந்துமுன் செய்யும் பிரார்த்தனை.

இறைத்தந்தையே, இவ்வுணவை ஏற்றுக்கொண்டுப் புனிதமாக்கு. இதனைப் பேராசைக் கல்மஷம் களங்கப்படுத்தாமல் இருக்கட்டும். உணவு உன்னிடத்திலிருந்து தோன்றுகிறது; அது உந்தன் கோயிலைக் கட்டுவதற்காக. இவ்வுணவை ஆன்மீகமாக்கி முழுமைப்படுத்து. அது பிரம்மத்திடமிருந்து  தோன்றி பிரம்மத்தில் சங்கமிக்கிறது. நாங்கள் உன் தோற்றத்தின் இதழ்கள், ஆனால் நீயோ அதன் மலர், அதன் உயிர், அதன் கோமளமான அழகு. எங்கள் நெஞ்சங்களில் உன் சாந்நித்தியத்தின் சுகந்தத்தை விரவிப் பரவச்செய். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
15 Prayer-Demand before taking food.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 2 ஜூலை, 2021

168. என் பக்தியின் விதைகளை உன் இதய-மண்ணிலே விதைப்பாயாக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் பக்தியின் விதைகளை உன் இதய-மண்ணிலே விதைப்பாயாக.

மெய்ம்மைக்கு விழிப்புறும் விடியற்பொழுதில், உன் பல-இதழ்களைக் கொண்ட தாமரைப்பாதத்தின் மேல் பிராயச்சித்த பச்சாதாபத் நீர்த்திவலைகள் படர்ந்துள்ளதைக் கண்டேன். அந்த அன்புடைய நீர்த்திவலைகளினால், என் ஆன்மா தானாகத் தூய்மையுற்றது. உன் அருட்கருணை மழையினால் பெருங்கவலையின் வறட்சி ஒழிந்தது. 

விடியல், பகல், இரவு என முப்பொழுதிலும் மலரும் கடந்த, நிகழ், வருங்கால இதழ்கள் அனைத்தும் நித்தியமாக வெளிபட்டுக் கொண்டிருக்கும் உன் வாழ்வின் மிருதுவான தன்மையை புலப்படுத்துகின்றன. 

உன் அருட்பீஜங்களை பிரார்த்தனையால்-உழப்பட்ட என் இதய மண்ணிலே நீ இடையறாமல் விதைப்பாயாக; அவைகள் மலர்ந்து மெய்யுணர்வு நல்கும் பலவாறான கனிகளை வழங்கும் மரங்களாக வளரட்டும்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
168 Bury the seeds of my devotion in Thy heart-soil.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!