செவ்வாய், 8 டிசம்பர், 2020

49. உன் மழையை மட்டுமே எதிர்பார்க்கும் வாழ்வின் மேகபட்சியாய் என்னை ஆக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் மழையை மட்டுமே எதிர்பார்க்கும் வாழ்வின் மேகபட்சியாய் என்னை ஆக்கு.

உன் பிரபஞ்ச இருப்பெனும் வானில், உன் வெளிப்பாட்டு மழைத்துளிகளைத் தாகத்துடன் எதிர்நோக்கும் நான் வாழ்க்கையின் ஒரு மேகபட்சி. வதைக்கும் மோன மேகங்களை ஊடுருவி உன் எங்கும் வியாபித்த மழையைப் பொழி.    

வற்றி வாடும் என் உதடுகளைத் தீண்டும் உன் ஒவ்வொரு மழைத்துளிக் காட்சிக்காகவும் நான் கவனத்துடன் எதிர்பார்க்கிறேன். நீ வருகையில் உன்னை நான் அருந்தி உட்கொள்வேன்; வெளிப்புறத்தில் என் நலிந்த உடலின் மேல் சன்னமாகப் பொழியும் உன் மழைத்துளி அனுபவஉணர்வுகளான பாதங்களை நான் வருடி அணைத்துக் கொள்வேன். 

இந்த என் நீண்டகாலத் தாகம் உன் தீண்டலினால் மட்டுமே தணியும். அது ஏங்கும் என் ஆன்மாவை உள்ளுமாகவும், விடாமுயற்சியினால் தகிக்கும் என் உடலைப் புறமுமாகவும் குளிர்விக்கும். என் அவநம்பிக்கை, சோர்வுச் சூறாவளிகள் கடந்துவிட்டன. உன் மழைத்துளி சாந்தம் என்னுள்ளே உள்ள ஒவ்வொரு வறண்ட அணுவையும் நனைத்துக் குளிர்விக்கின்றது. இனி நான் உன் திருப்தி கானத்தைப் பாடிக்கொண்டே எல்லாத்திசைகளிலும் சிறகடித்துப் பறந்துசெல்வேன்.

சொர்க்க லோகங்களின் வழியே பொழியும் உன் எங்கும்நிறை கனிவான ஆறுதலெனும் மழைநீரைத் தவிர வேறு எந்த குடிநீரையும் தேடிச் செல்லாத வகையான உன் மேகபட்சியாய் என்னை ஆக்கு.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
49 Make me the Lark of Life, looking only for Thy Rain.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: