ஞாயிறு, 31 ஜனவரி, 2021

210. இணைந்து ஐக்கியமான இதயங்களின் கோயிலில்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

இணைந்து ஐக்கியமான இதயங்களின் கோயிலில்.

ஜீவர்களின் கடினமான கல்நெஞ்ச பூமியில் உன் மிருதுவான அல்லிமலர்ப் பாதம் நடனமாடாதென்பது பொருத்தமே. மற்றவர்களுக்காகக் காட்டும் தயையின் இதழ்களின்மேல் உன் கோமள பாதாம்புஜம் என்றும் நடனம்புரியட்டும்.

தெய்வத்தாயே, உன் நெஞ்சத்துடிப்புகளை நான் என்நெஞ்சில் உணரவேண்டும்; உன் ஆனந்தத்தை என் சுகத்திலும்; உன் ஆற்றலின் வழிகாட்டுதலை என் செயலிலும்; உன் பேருணர்வை என் ஆன்மாவிலும் உணரவேண்டும்.

தெய்வத்தாயே, என் அன்புமலர்கள் யாவற்றையும் உன் நிரந்தர பாதங்களில் நான் சமர்ப்பிக்கின்றேன்.  

தெய்வத்தாயே, என் பக்தி மலர்மொட்டினை நன்கு விரித்து, உன் நறுமணத்தை அதன்மூலம் வெளிப்படுத்து; அது உன்னைப் பற்றி ரகசியக்குரலில் என்றும் ஒலித்துக்கொண்டே, என் ஆன்மாவிலிருந்து மற்றவர்களின் ஆன்மாக்களுக்கு பரவட்டும்.

என் அன்பை பிறரிடம் நான் காணுமாறு செய்ய வேண்டுகின்றேன். அந்த பேரன்பின் ஒளிப்பிரகாசத்தில் முகத்திரை நீங்கிய உன் சாந்தமுகத்தை  நான் காணுமாறு செய்வாயாக.

நான் என்னை மற்றவர்களினில் காணுமாறு செய்வாயாக. எங்கள் இணைந்து ஐக்கியமான இதயங்களினில் நீ வீற்றிருப்பதை நான் என்றும் பார்க்குமாறு செய்வாயாக.

என் இதயத்தின் ரகசியக்குரலில், உன் ரகசியக்குரலின் சிலிர்ப்பை நான் உணர்கின்றேன். உன்மேல் கொண்ட என் அன்பின் தாபத்தினின்று வீசும் ஒளியில், உன் அமைதியானப் புனிதத் திருமுகத்தை மிகுந்த முயற்சிக்குப் பின் இறுதியில் நான் காண்கின்றேன்.  

தெய்வத்தாயே, எங்கள் இதயங்களை இணைத்து ஐக்கியமாக்கி ஒரே இதயமாக்கு. அந்த இணைந்து ஐக்கியமான இதயத்தின் புனிதபீடத்தின்மேல், உன் எங்கும்நிறை இறைத்தன்மை கொலுவீற்றிருப்பதை நாங்கள் என்றும் கண்டுகளிக்குமாறு செய்வாயாக.  
  
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
210 In the Temple of United Hearts.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 30 ஜனவரி, 2021

117. ஞான அனுபூதி பெற உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஞான அனுபூதி பெற உரிமையுடன் வேண்டுதல்.

பேருணர்வே, அன்பான இறைத்தந்தையே, ஜகத்தின் பரமாத்மாவே, உணர்வுகளுக்கெல்லாம் உணர்வே, நண்பர்களுக்குள்ளிருக்கும் நண்பனே, என் வாழ்வின் மூல ரகசியத்தை எனக்கு விளக்கு! நான் மூச்சற்றும் மரணமற்றும் சும்மா இருக்கும்போது, உன்னை வழிபட எனக்குக் கற்பி. என் பக்திக்கனலினால் என் அறியாமையைச் சுட்டெரித்து விடு. என் ஆன்ம நிஸ்சல நிலையில் - வா, பேருணர்வே, வா! என்னை முழுதுமாக ஆட்கொள், உன் மரணமற்ற இருப்பை என்னுள்ளேயும், என்னைச் சுற்றியும் நான் உணருமாறு என்னைப் பழக்கு. வா, பேருணர்வே, வா! வா, பேருணர்வே, வா!   
    
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
117 Prayer-Demand for Illumination.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

58. என் ஆன்மக் கடலின் ஆழத்தில் மீன்வேட்டையாடி உன்னைப் பிடிக்க எனக்குக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் ஆன்மக் கடலின் ஆழத்தில் மீன்வேட்டையாடி உன்னைப் பிடிக்க  எனக்குக் கற்பி.

என் அதீத-உணர்வுக் கடலின் ஆழத்தில் மீன்வேட்டையாடி உன்னைப் பிடிக்க  நான் இறங்கினேன். உறுதிதரும் உற்சாகமூட்டும் எண்ணங்களாலான சிறுமீன்கள் என் மீன்தூண்டிலை வந்து பதம் பார்த்தன. என் கவனமெனும் மீன்தூண்டில்மிதவை தத்தளித்தது, ஒவ்வொரு முறையும் நான் தூண்டிலை மேலிழுக்க, நான் உன்னை நழுவவிட்டேன்.

நான் என் தியான-தூண்டிலில் அன்பின் குழம்புப்பொடியை நன்கு தடவினேன்:  சிறுமீன்கள் வந்து தூண்டிலை இழுத்தன, நான் என் மன தூண்டில்மிதவையை கவனத்துடன் கண்காணித்தேன். ஆஹா! என் மனத்தின் தூண்டில்மிதவை உன் ஆனந்த-அலைகளுக்கடியில் அழுந்தி மறைந்தது. 

என் உணர்வுக் கடலில் வாழும் பிரம்மாண்ட குடியாளனே, நான் உன்னைப் பிடித்திழுத்தேன், ஒரே தாவலில் நீ குதித்து என் நெஞ்சகக் கரைக்கு வந்து சேர்ந்தாய். என் ஆன்மக் கடலின் ஆழத்தில் மீன்வேட்டையாடி உன்னைப் பிடிக்க  எனக்குக் கற்பி. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
58 Teach me to fish for Thee in the deep waters of my Soul.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 26 ஜனவரி, 2021

181. பேதங்களை என் சமரசத்தின் பக்கத்துணைகொண்டு வெல்ல எனக்குக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பேதங்களை என் சமரசத்தின் பக்கத்துணைகொண்டு வெல்ல எனக்குக் கற்பி.

என்னைச் சுற்றி சோதனை அணுகுண்டுகள் கீச்சிட்டுப் பறந்தாலும் எனக்குக் கவலையில்லை; என் தன்மானத்தினைக் குறிவைக்கும் பீரங்கிக்குண்டுகள் என்னை நோக்கி அடிக்கப்பட்டாலும் நான் அதைக் கண்டுகொள்ள மாட்டேன்; எந்திரத்துப்பாக்கியால் வஞ்சனைக்குறும்பு ரவைகள் என்னை சல்லடைபோட்டு துளைத்தாலும் நான் பொருட்படுத்த மாட்டேன், நீ என்னுடன் இருக்கும்போது உன் கோட்டைமதிலுக்குப் பின்னால் எத்தகைய தாக்குதலினின்றும் நான் காக்கப்படுவேன். மாறாக, நீ என்னுடன் இல்லாதபோது, நான் நவீன விஞ்ஞானத்தின் துணையால் எழுப்பப்பட்ட அதீததிண்மையான கோட்டையில் இருந்தாலும், எனக்கு பாதுகாப்பு உறுதியில்லை. எனக்கு மற்றவர்களின் கோபத்தை உசுப்பி, அவர்களின் அனல்கக்கும் சினத்தை எழுப்பிவிட நாட்டமில்லை; ஆனால், என் ஆன்மாவின் மறைவான குகையில் எனக்கு உறுதியான பாறைபோல் புகலளிக்கும் உனக்கு என் நன்றியை என்றும் உரித்தாக்குவேன்.

என் சூழ்நிலைச் சதையில் கூரியஆணிபோல் துருவிய கலக்கக் காயங்களை நான் குணப்படுத்த எனக்கு அருள்புரி.

ஒளி அரசே, உன் வாகைசூடிய பதவியேற்றத்தின்மூலம் , இருளை அரியணையிலிருந்து நீக்க எனக்குக் கற்றுக்கொடு.   

தனிமை ஏக்கத்தால் பீடிக்கப்பட்ட ஆத்மாக்களுக்கு, புன்னகை மருந்திட்டு குணப்படுத்த எனக்கு அருள்புரி; காய்ந்து வறண்ட மனங்களுக்கு இதமளிக்கும் பருவமழையாய் பெய்ய எனக்கு அருள்புரி; கலக்கமூட்டும் கள்வனைத் துரத்தியடிக்கும் ரோந்துசுற்றும் ஒளிவிளக்காக நான் ஆக எனக்கு அருள்புரி; சோகத்தினால்-கருகிய இதயங்களுக்கு சாந்தமெனும் அமிர்தமாக ஆக எனக்கு அருள்புரி; இருண்ட வஞ்சனையை அருளொளியால் ஒழிக்க எனக்கு அருள்புரி.

என் சமரசத்தின்மேல் நான் கொண்ட உறுதியான ஆக்டொபஸ் பிடியினால் பேதங்களை வெல்ல எனக்குக் கற்பி. என் நேர்மையின்மூலம் அலட்சியத்தை வெல்ல எனக்குக் கற்பி. பிறரின்மேல் அனாவசியமாக குற்றம்காணும் என் பழக்கத்தை, அதற்கு மாறாக, என்குற்றத்தைக் கண்டு கண்டிப்பதன்மூலம் மாற்ற எனக்கு அருள்புரி.

புலம்பிப் பொருமும் மனங்களுக்கு உன் சாந்தத்தின் அமிர்த-தூக்கமருந்தைக்  கொடுத்து, உன் மடியில் உறங்கவைக்க எனக்குக் கற்பி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
181 Teach me to Conquer Discord by holding close my own Harmony.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 25 ஜனவரி, 2021

50. என்னைப் புன்னகை-கோடீஸ்வரனாக ஆக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னைப் புன்னகை-செல்வந்தனாக ஆக்கு.

அமைதியான சிரிப்பே, என் ஆன்மாவின் வழியே புன்னகை செய். என் ஆன்மா என் இதயத்தின் வழியே புன்னகை செய்யட்டும். பின், என் இதயம் என் கண்களின் வழியே புன்னகை செய்யட்டும். 

புன்னகையின் இளவலே! என் தோற்ற விதானத்தின் கீழுள்ள அரியணையில் வந்து அமர். உன் மிருதுவான ஆன்மாவை எந்த ஒரு பொய்ம்மை எதிரியும் உனையழிக்க நெருங்கமுடியாத வண்ணம், நான் என் வாய்மையெனும் கோட்டையில் பாதுகாப்பேன்.

என்னைப் புன்னகை-செல்வந்தனாக ஆக்கு. அதன்மூலம், உன் புன்னகைப் பொக்கிஷத்தை உலகிலுள்ள சோகம் கவ்விய எல்லா இதயங்களுக்கும் மாரிபோல் நான் வாரி வழங்குவேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
50 Make me a Smile-Millionaire.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 22 ஜனவரி, 2021

48. அனைவரின் இதயத்திலும் என் ஆனந்தவெள்ளம் நயாகரா அருவியாய்க் கொட்டட்டும்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அனைவரின் இதயத்திலும் என் ஆனந்தவெள்ளம் நயாகரா அருவியாய்க் கொட்டட்டும்.

நான் சந்திக்கும் அனைவரின் மேலும் என் இதயத்திலிருந்து சுரக்கும் ஆனந்தவெள்ளம் என்றும் வற்றாமல் நயாகரா அருவியாய்க் கொட்டட்டும்.  அந்த பெரும் வெள்ளம் கனத்த மரக்கட்டை போன்ற மற்றவர்களின் கஷ்டங்களை அடித்துச் செல்லட்டும். என் ஆனந்தம் சிந்தும் நிலவின் கிரணங்களைக் கொண்டு பிரிந்து வாடும் அனைவரும் அவர்கள் ஏக்கத்தைக் கழுவட்டும். 

பலமைல் தூரம் விரிந்து அகன்று, எண்ணற்றோர் மனோபாவங்களில் சோகத்தினாலான பெருங்கட்டிடங்களை நொறுக்கித்தள்ளும் சிரிப்பின் பெருஞ்சுழற்காற்றாக நான் ஆவேனாக. அனைவரின் நெஞ்சங்கள்படும் அல்லல்களை நான் சுழற்றி எரிந்து தகர்ப்பேனாக.

இரவின் இருள் கவ்விக் காணாத மனங்களுக்கடியில் மறைக்கப்பட்ட உன் பரந்த எழிலழகை, மின்னல் ஒளிக்கீற்று போன்று என் புன்னகையினால் துரிதமாக பிறர் காணும்வண்ணம் வெளிக்கொணர்வேனாக.

நான் ஒளிக்கதிர்களாகி, மனித மனங்களில் இருண்ட மூலைமுடுக்குகளிலெல்லாம் யுகாந்தரமாக ஆக்கிரமித்திருக்கும் காரிருளை ஒரே அடியில் துரத்தியடிக்க எனக்கு அருள்புரி. உன் அருளால் ஞானஒளியின் சிறுகீற்று, பலகோடி ஆண்டுகளாய்க் குவித்துவந்த தீவினைகளை ஒருகணத்தில் தவிடுபொடியாக்கும். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
48 May the Niagara of my Joys inundate all hearts.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 21 ஜனவரி, 2021

98. அழைப்பிற்கு பதிலளிக்கக்கோரி கடவுளை உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அழைப்பிற்கு பதிலளிக்கக்கோரி கடவுளை உரிமையுடன் வேண்டுதல்.

இறைத்தந்தையே, நீ என் கோயிலுக்கு இன்று வருகை புரிந்துள்ளாய். உன் வருகையால், என் எல்லா சேவகப் புலன்களும் பிரகாசமாக விழிப்படைந்துள்ளன, என் இதயவாசல்கள் எல்லாமே திறந்துவிட்டன. உன் அருளால், யுகாந்தரமாகக் கவ்விய இருள் நீங்கியது. உன் வருகையின் அறிகுறி புலப்படும்போதே அது ஓடிமறைந்தது. உரத்த ஓசையிடும் என் ஏக்கங்கள் நீ இருப்பதைக் கட்டியம் கூறுகின்றன. என் ஆன்மச்சிமிழிலிருந்து பக்திமணம் உன் சன்னதிபீடத்தை நோக்கி உயர்கின்றது. எனக்கு அருள்புரி! என் அழைப்பிற்குப் பதிலளி! 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva
Edited by: V.R. Ganesh Chander

Original: 
98 Demand that God respond.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 19 ஜனவரி, 2021

194. என் மனத்தின் தீன-ஸ்வர விம்மலில் நான் உன் மாய கீதத்தைக் கேட்டேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் மனத்தின் தீன-ஸ்வர விம்மலில் நான் உன் மாய கீதத்தைக் கேட்டேன்.

லோகாயத ஆரவாரயிசையின் கனத்த முகமூடியைத் தள்ளி விலக்கினேன். வரம்பற்ற கீதமே, உன் குரலைப் பிறகு நான் கேட்டேன். வயலின்களின் கூக்குரலிலும், யாழின் ரீங்காரத்திலும், என் மனத்தின் தீன-ஸ்வர விம்மலிலும் நான் உன் கீதத்தைக் கேட்டேன். என் ஆன்மாவின் அற்புத கீதமே, என் இதயத் தந்திகளுக்குள்ளே மறைந்திருக்கும் உன் மெல்லிய நளினமான  புலரும் இசை என் இருண்ட மனத்தளத்தில் பரந்து விரவுவதை, நான் இறுதியில் கண்டுகொண்டேன். மாயமந்திரக் குரலே, யுகங்களாய் என்னைப் பிணைத்த சோம்பலை விட்டொழிக்க வைத்தாய். என் கீதங்கள் அனைத்தினையும் உன் என்றும்-சாந்திதரும் கீத சந்நிதியில் நான் சமர்ப்பிக்க இங்கு வந்துள்ளேன்.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
194 In the Whisper-Sobs of my mind I heard Thy Magic Voice.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 18 ஜனவரி, 2021

113. என் பிரார்த்திக்கும் குரலுக்குச் சற்றே பின்னால் நான் உன்னை உணர விரும்புகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் பிரார்த்திக்கும் குரலுக்குச் சற்றே பின்னால் நான் உன்னை உணர விரும்புகின்றேன்.

இறைத்தந்தையே, என் பார்வைக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய், அதன்மூலம் வெளியே தென்படும் உன் அழகைக் காணமுடிகிறது.  என் கேட்கும் சக்திக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய், அதன்மூலம் பிரபஞ்சத் தோற்றத்தில் வெளிப்படும் உன் குரலைக் கேட்கமுடிகிறது. என் தொடுவுணர்ச்சிக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய், அதன்மூலம் உன் உலகைத் தொட்டுணரமுடிகிறது. மலர்களின் இனிமையிலும், போஷிக்கும் உணவின் சுவையிலும், உன் நிரந்தர இனிமையின் இருப்பை உணர்த்தும் சாராம்சம் மறைந்து விளங்குகின்றது. என் பிரார்த்திக்கும் குரலுக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். நான் வழிபட உதவும் மனத்திற்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். என் இளகிய உணர்வுகளுக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். என் எண்ணங்களுக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். என் தியானங்களுக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். இயற்கையின் வனப்பின் மறைப்பிற்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். என் அன்பின் திரைக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். உன்னை நீ உள்ளவண்ணம் எனக்குக் காட்டு, இந்த மர்மத் திரைகளுக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டு.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
113 I want to feel Thee just behind the Voice of my Prayer.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 15 ஜனவரி, 2021

31. கடவுளை ஒன்றிணைந்த அகிலஉலக நாடுகளுக்கு தலைவனாக ஆட்சிபுரிய உரிமையுடன் பிரார்த்தனை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கடவுளை ஒருங்கிணைந்த அகிலஉலக நாடுகளுக்குத் தலைவனாக ஆட்சிபுரிய உரிமையுடன் பிரார்த்தனை.

எங்கள் இறைத்தந்தையே, கோளங்கள், கேலக்சிகள், உலகங்கள், பிரபஞ்சங்கள் இவைகளை ஒருங்கே ஆட்சிபுரியும் தலைவனே, சுய-வளர்ச்சி மற்றும் சுதந்திர-இச்சாசக்தியுடன் கூடிய உன் ஜனநாயக ஆட்சியின்மூலம் உன் பிரஜை-குழந்தைகளை உன் பூரணத்துவத்தினை நோக்கிக் கிரமமாக  அழைத்துச் செல்கின்றாய்.

உன் சுதந்திர-இச்சாசக்தி நாடுகளில் பிறந்ததினால், நாங்கள் எங்கள் தெய்வீகப் பிறப்புரிமையான நிரந்தரமான, அழியாத சுதந்திரத்தை பெற்றுள்ளோம். ஆனால், அந்தகோ! எங்கள் எங்கும்நிறைத் தன்மையை புலன்-சுகங்கள், தீயவை, சுயநலம், கண்மூடித்தனம், குறுகியநோக்குடைய  நாட்டுப்பற்று போன்ற சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அடைத்து சிறைப்படுத்திவிட்டோம். 

கற்பனையில் பனிக்கட்டியாக திடமாகிய குடும்ப, சமுதாய, நாட்டு வரம்புகளையெல்லாம் எங்கள் புரிதலுடன் கூடிய அன்பின் இளஞ்சூட்டினால் உருக்கிக் கரையச்செய்ய எங்களுக்குக் கற்பி.

சர்வமும் அறிந்த தந்தையே, நாங்கள் சுயமாக நிர்ணயிக்கும் விவேகத்தைக் கொண்டு எங்களை நாங்களே ஆள, எங்கள் நெஞ்சங்களில் உள்ள எல்லா நற்பிரஜைகளின் சுதந்திர தீர்மானத்தின்மூலம், ஒருங்கிணைந்த அகிலஉலக நாடுகளுக்கு உன்னை நிரந்தரமாகத் தலைவனாய் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில் நாங்கள் வாழுமாறு எங்களுக்கு அருள்புரி.  

எங்கள் தேசாபிமானத்தை விரிவடையச் செய்து, அதில் ஜாதி, வகுப்பு, கொள்கை, நிற வேற்றுமையின்றி, பூமியில் வாழும்  எல்லாரையும் அரவணைக்குமாறு, எங்கள் ஆன்மா, செழுமை, புரிதல் ஆகியவற்றை வளப்படுத்த எங்களுக்குக் கற்பி.

பிரபஞ்சத் தலைவனே, உன் வாழ்வின் நெறியை நாங்கள் கடைபிடிக்க எங்களுக்கு அருள்புரி; சுதந்திரமாகப் பிறந்த உன் குழந்தைப் பிரஜைகள் அனைவரையும்: நல்லவர்களையும் தவறின் போதையில் மதிமயங்கியவர்களையும் மட்டுமல்லாது, பாலூட்டிகள், பறவைகள், விலங்குகள், மென்மையான மலர்கள், கவனமின்றி நடக்கையில் எங்கள் காலடியின்கீழ் நசுங்கும் பேசா புற்கள், காட்டுத் தளைகள் போன்றவைகளையும் அவைகளின் சுதந்திரத்தை மதித்து அன்புடன் அணுக எங்களுக்கு அருள்புரி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
31 Prayer-Demand asking God to be the President of the United States of the World.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 13 ஜனவரி, 2021

100. புனிதத் திரியேகத்திற்கு (Holy Trinity) உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

புனிதத் திரியேகத்திற்கு (Holy Trinity) உரிமையுடன் வேண்டுதல்.

பரலோகத் திரியேகமே (ஓம், தத், ஸத்), எல்லாவற்றையும் கடந்ததாய் இருக்கும் கடவுளே (ஸத்), பிரபஞ்சத்தில் கிறிஸ்துப்* பேருணர்வாக இருக்கும் கடவுளே (தத்), படைக்கவல்ல அதிர்வலை சக்தியாக இருக்கும் கடவுளே (ஓம்)! எனக்கு பேருண்மையை அறிய ஞானத்தை அருள்வாயாக! மேலும், என் சுயமுயற்சியுடனும், தர்மநெறி அறிவுடனும், நான் ஆன்மதரிசனம் எனும் அரிய ஏணிப்படிகளில் ஏற விரும்புகின்றேன் - முடிவில் அந்த ஒளிரும் சித்தி முகட்டை அடைந்து, இரண்டற்ற ஒன்றேயான அந்த தெய்வீகப் பேருணர்வினை நேரடியாக அனுபவிக்க!  

--- 
கிறிஸ்துப் பேருணர்வு:  இதனைக் "கூடஸ்த சைதன்யம்", "கிருஷ்ணப் பேருணர்வு" எனவும் கூறுவர். இது பிரபஞ்சம் முழுவதிலும் பரவி விரவியிருக்கும் ஒரே உணர்வு.  
  
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva
Edited by: V.R. Ganesh Chander

Original: 
100 Demand to the Holy Trinity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 12 ஜனவரி, 2021

115. தூக்க, விழிப்பு நிலைகளுக்கிடையே செய்யும் பிரார்த்தனை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தூக்க, விழிப்பு நிலைகளுக்கிடையே செய்யும் பிரார்த்தனை.

தந்தையே, விழிப்புநிலைக்கும் தூக்கத்திற்கும் இடைப்பட்டபொழுதில் நான் இருக்கையிலே, நீ உன் சேவகனான என்னிடம் வா, வந்து விளையாடு. உன் அன்பென்னும் கடலில் நான் மிதக்கின்றேன். துள்ளிக்குதிக்கும் உணர்வெழுச்சி அலைகளில் நான் நடனமாடுகின்றேன். உன்னிடம் கண்ணாம்பூச்சி ஆட்டம் நான் ஆடுகின்றேன். உன் பெருமகிமை உன் சேவகனான என்னையும் உன் அரியணையில் அமர்த்துகின்றது. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
115 Prayer between Sleeping and Waking.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 11 ஜனவரி, 2021

158. ஒவ்வொருமுறை என் பிரார்த்தனையெனும் நீச்சல்அடி போடும் போதும், நான் உன்னை நோக்கி அருகாமையில் வந்து கொண்டிருக்கின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஒவ்வொருமுறை என் பிரார்த்தனையெனும் நீச்சல்அடி போடும் போதும், நான் உன்னை நோக்கி அருகாமையில் வந்து கொண்டிருக்கின்றேன்.

தந்தையே, உனக்காக ஏங்கும் என் ஏக்கக்கடலுள் பெரும்சோதனைச் சூறாவளிகளினால் அலைக்கழிக்கப்பட்டு நான் நீந்திக் கொண்டிருக்கின்றேன். சுக-துக்கமெனும் அலைகளின்மேல் நான் மிதந்தாலும், அலட்சியமெனும்  ஆழத்திற்கு நான் அமிழ்ந்தாலும், நான் உன் கரையில்லாக் கரையையே தேடிக் கொண்டிருக்கின்றேன். ஒவ்வொருமுறை நான் பலமாக பிரார்த்தனையெனும் நீச்சல்அடி போடும் போதும், நான் உன்னை நோக்கி அருகாமையில் வந்து கொண்டிருக்கின்றேன். நான் ஒருக்காலும் நீந்துவதிலிருந்து ஓயமாட்டேன், ஏனெனில் நீ என் வருகைக்காகக் காத்துக் கொண்டே இருக்கின்றாய் என்பது எனக்குத் தெரியும்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
158 With every stroke of my Prayer, I am moving nearer to Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

157. என் ஆன்மீகக் கண்ணினை எப்பொழுதும் திறந்தே இருக்க வை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் ஆன்மீகக் கண்ணினை எப்பொழுதும் திறந்தே இருக்க வை.

ஆன்மீகக் கண்ணே*, ஒருமுறை திறந்த பின் என்முன் எப்பொழுதும் திறந்தே இரு. அதன்மூலம், நான் வாழ்க்கைப் பாதையிலிலுள்ள பள்ளங்குழிகளைத் தவிர்த்து, உன் சாந்தி அரண்மனைக்கு இட்டுச்செல்லும் விரைவுவழித் தடத்திற்கு செல்லமுடியும். என் எல்லாப் பிரச்சினைகளுக்கும் எனக்கு தீர்வைக் காண்பி.

---
ஆன்மீகக் கண்: மூன்றாம் கண், நெற்றிக்கண், ஒற்றைக்கண் (பைபிள்) எனவும் அழைக்கப்படும். இது புருவ மத்தியில் நெற்றிப்புறத்தில் ஜோதியாக விளங்கும் "கண்". 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
157 Keep my Spiritual Eye open forever.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 8 ஜனவரி, 2021

180. உன் ஒளி எங்கள் வழியே பிரகாசிக்க எங்களை ஒளியூடுருவுமாறு செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் ஒளி எங்கள் வழியே பிரகாசிக்க எங்களை ஒளியூடுருவுமாறு செய்.

உன் பிரபஞ்சக் குடும்பத்திலுள்ள தேவதூதன், வெற்றிவீரன், பட்டுப்பூச்சி, நான் என எல்லா உறுப்பினர்களுக்கும், உன் அன்பின் சூரியக்கதிர்கள் சமமாகப் பிரகாசத்தை நல்குகின்றன. எங்கள் மந்தபுத்தியினால் நாங்கள் எங்களை ஒளிபாயாத ஜடமாக ஆக்கிக்கொண்டால் அது எங்கள் குற்றமே. நாங்கள் சரியாகப் புரிந்துகொள்ள உதவும் எங்கள் கண்ணாடியில் படிந்திருக்கும் தவறெனும் அழுக்கின் படலத்தைத் துடைக்க எங்களுக்குக் கற்பி. 

எங்கள் ஆன்மீகப்பிடிப்புக் கரங்கள் பலவீனமாக இருக்கின்றன. தலைசிறந்த தூய்மையாளனே, எங்கள் அங்கங்களில் உன் சக்தியை புகுத்து. அதன்மூலம், எங்கள்மேல் படிந்து உன் ஒளியை தங்குதடையின்றி பிரகாசிப்பதைத் தடுக்கும் இருள்மண்டிய தூசியை துடைத்து அகற்றுவோம். உன்னைப் பிரதிபலிக்கும் கேடில்லா, பிரகாசமான கண்ணாடிகளாக எங்களை ஆக்கு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
180 Make us Transparent, that Thy Light may shine through us.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 7 ஜனவரி, 2021

63. எங்கள் எண்ணங்களையும், லட்சியங்களையும் புனிதமாக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எங்கள் எண்ணங்களையும், லட்சியங்களையும் புனிதமாக்கு.

வரம்பற்ற ஆற்றலுடைய ரஸவாதி, எங்கள் பலஹீனத்தை பலமாகவும், தவறான எண்ணங்களை, நல்லெண்ணங்களாகவும் புனிதமாக்கு. 

ஒவ்வொரு காரியத்தின் விதைகளிலும் உன் புரிதலெனும் பூவை மலரச்செய். 

உன் தீர்க்கதரிசனமெனும் தந்திர மாயக்கோலினால், எங்கள் அருவருப்பான சுயநலப்பேய் குறிக்கோள்களை அனைவற்றிற்கும் சேவைபுரியும், மேன்மையான லட்சிய தேவதைகளாக உருமாற்று. 

ஒவ்வொரு ஆசைக்குதிரைகளையும் உன் இருப்பிடத்தை நோக்கி வேகமாக ஓடுமாறு பழக்கு.

எங்கள் இருண்ட மருளை பொன்னார்ந்த ஞானமாக மாற்று.

எங்கள் குறைபாடுகளெனும் ஜட மூலதாதுக்களை, புனிதமான சொக்கத்தங்கத்தால் ஆன திரவநதியாக உருமாற்றி, அதனை உன் கரையை நோக்கித் தொடர்ந்து பாயுமாறு செய்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
63 Spiritualize our Thoughts and Ambitions.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 6 ஜனவரி, 2021

35. நான் தான்தோன்றித்தனமான அபஸ்வர கீதங்களை உனக்கு சமர்ப்பிக்க மாட்டேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் தான்தோன்றித்தனமான அபஸ்வர கீதங்களை உனக்கு சமர்ப்பிக்க மாட்டேன்.

எவருடைய குரலினாலும் இசைக்கப்பெறாத பாட்டை நான் உனக்குப் பாடுவேன். என் கன்னி இசைக்கானங்களை நான் உனக்காக அர்ப்பணம் செய்வேன்.
 
யாரும் கேட்காத என் இதயகானத்தை நான் உனக்காகப் பாடுவேன். என் சங்கீதமழலையை போஷித்து வளர்த்து, மேலும் பயிற்சிபெறுவதற்காக அதனை உன்னிடம் அழைத்து வந்துள்ளேன். 

தான்தோன்றித்தனமான, அதிநுணுக்கமான கட்டுப்பாட்டுடன் கூடிய பாட்டினை நான் உனக்கு சமர்ப்பிக்க மாட்டேன்; மாறாக, என் இதயத்தின் தெம்மாங்குப் பாட்டுக்களை உனக்கு அர்ப்பிப்பேன். பழகித்தேய்ந்து, உணர்வெழுச்சியில் பிறந்த இசை மற்றும் மனக்கற்பனையில் உருவான பாட்டுப்பூக்களை நான் உனக்கு அர்ப்பிக்க மாட்டேன்; மாறாக, உயர்ந்த மலைப்பாதை போன்ற என் உள்ளத்தில் மலரும் வனமலர்களைக் கொண்டு உன்னை அர்ச்சிப்பேன். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
35 I will not offer unto Thee mind-made hothouse Songs.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 4 ஜனவரி, 2021

169. நீ என்னுடையவனாக ஆகுவாயா என்பதை அறிய நான் விரும்புகிறேன்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நீ என்னுடையவனாக ஆகுவாயா என்பதை அறிய நான் விரும்புகிறேன்.

நான் என் ஆசைகளையெல்லாம் நொறுக்கித் தள்ளனும் எனினும், நான் கோடிக்கணக்கான ஜென்மகளெடுத்து அவற்றுள் உழலனும் எனினும், பிறப்புத் துன்பங்களையும், சாவின் கொடுமையையும், எல்லா வலிகளையும் நான் அனுபவிக்க நேரினும் எனக்குக் கவலையில்லை - நான் உன்னைக் கண்டுகொள்ள முடியுமெனில். மேலும், நான் உன்னை அடைவதற்கு மேற்கொள்ளும் கடின முயற்சியில், நான் எடுத்த பிறவிகளின் சடலங்கள் மலைபோல் குவியினும் எனக்குக் கவலையில்லை. 

என் சுகங்கள் எல்லாவற்றிற்கும் மாற்றாக உன் சுகத்தையே நான் ஏற்க  விரும்புகின்றேன். என் எல்லா அநித்திய இன்பங்களையும் நான் துறப்பது உனக்காகவே! உன் ஆனந்தம் ஒன்றே என்னுடையது, அது ஒன்று மட்டுமே என்னுடையது. 

தெளிவாகக் கூறு என்னிடம்: நீ நிச்சயமாக என்னுடையவனாக ஆகுவாய் என்பதை! பின், நான் பொறுமையுடன் ஒரு லட்ச வருடங்களை ஒரு தினமாகக் கருதிக் காத்துக் கொண்டிருப்பேன்.  

கூறு என்னிடம் - நீ என்னுடையவனாக ஆகுவாயா?
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
169 I want to know that Thou wilt be Mine.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

121. தாயே, என்னிடம் தயையின் ரூபத்தில் வா.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தாயே, என்னிடம் தயையின் ரூபத்தில் வா.

அந்த நாள் என்று விடியுமோ, பராசக்தித் தாயே, உன் பெயரை உச்சரிக்கையில் என் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து, என் இதயத்தின் வறட்சியை வெள்ளக்காடாக்கி, என் அறியாமையின் இருண்ட நிலைக்கதவுகளைப் பேர்த்தெறியச் செய்யும் (அந்த நாள் என்று விடியுமோ?).  

பின்பு, தேங்கிய அந்த கண்ணீர்க் குளத்தில் ஒளிரும் ஞானத்தாமரை மலரும், என் மன இருள் முற்றிலும் அகலும். ரூபமற்றவளே,  எங்கும்நிறைந்த என் தாய் பராசக்தியே,  என்னால் உணரமுடியும் வண்ணம் தயை ரூபத்தில் என்னிடம் வா, வந்து என்னை சோகத்தின் கரைகளிலிருந்து மீட்டுச் செல்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
121 Come to me as Kindness.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 2 ஜனவரி, 2021

195. நான் எப்பொழுதும் உன்னுடையவனாக இருப்பேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் எப்பொழுதும் உன்னுடையவனாக இருப்பேன்.

நான் மிக தொலைவிற்கு, வெகுசேய்மையிலுள்ள விண்மீன்களை விட நெடுதூரம் சென்றாலும், நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்!

பக்தர்கள் வருவார்கள், செல்வார்கள்; ஆயினும் நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்!

நான் அலைபோல்வரும் ஜென்மந்தோறும் தாவி பல ஜீவிதங்களை எடுப்பினும், தனிமை வானிற்கடியில் அநாதரவாய்க் கிடந்தாலும், நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்! 

உலகம் உன் கேளிக்கையில் மயங்கி உன்னை விடுத்தாலும், நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன். நீ எனக்குக் கொடுத்த அனைத்தையும் திருப்பி எடுத்துக் கொண்டாலும், நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்.

மரணம், நோய், சோதனைகள் - இவை என்னை சல்லடையாய்த் துளைத்து நார்நாராகக் கிழித்தாலும், நினைவின் பிரகாசம் மங்கி அணையும் வேளையில், என் உயிர்நீக்கும் கண்களைப் பார், அவை அமைதியாக சொல்லும், "நான் எப்பொழுதும் உன்னுடையவனாகவே இருப்பேன்."

என் குரல் நுடங்கி ஒடுங்கி எனைவிட்டு அகன்றிடினும், என் ஆன்மாவின் மோனக் குரலினால் பூரித்து நான் உன்னிடம் சன்னமாய் ஒலிப்பேன், "நான் எப்பொழுதும் உன்னுடையவனே!"
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
195 I will be Thine always.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!